தரமான கதையம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதன் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் தன்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர் அருள்நிதி.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க இருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் இந்த க்ரைம் கதையின் கதாநாயகியாக தற்போது மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அது மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் என திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு உன்னதமான கலைஞர் அருள்நிதி சார். எனவே ஏறக்குறைய அதே குணங்கள் நிறைந்த ஒருவரை தான் எங்கள் படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி, நாங்கள் மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகன், கதாநாயகி என இருவரையும் சார்ந்து நகரும் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 31-ம் தேதி துவக்க இருக்கிறோம்” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன்.