ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. மக்களின் பேராதரவால் இத்திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
இவ்வெற்றி விழாவில் உதயநிதி பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மிகப் பெரிய நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் தந்த மிகப் பெரிய ஆதரவுக்கும் நன்றி.
இந்தப் படத்தை ஆரம்பித்தபோதே இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்று தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய படைப்பாக மாறியதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ்தான் காரணம்.
படத்தில் எனக்கு அடிபட்டபோது “படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார் கீர்த்தி. “நடிப்பவர்கள் அடிபட்டால் படம் வெற்றி பெறுமா..?” என்று நானும் கிண்டல் செய்தேன். ஆனால் அவர் சொன்னது போலவே படம் மிகப் பெரிய வெற்றி. என் முதல் படம் மிகப் பெரிய வெற்றி. அதேபோல் என் கடைசி படமான இந்த ‘மாமனிதனும்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது மிகப் பெரிய மகிழ்ச்சி.
வடிவேலு நடிக்க மறுத்தால் இந்தப் படத்தை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். அவர்தான் இந்த படமே. அவர் ஒப்புக் கொண்டு நடித்ததற்கு நன்றி. பகத் பாசில் படத்தில் முக்கியமான தூணாக இருந்தார். அவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி…” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “இன்றைக்கு எங்களது ‘மாமன்னன்’ படத்தின் 50- வது நாள். ஒரு நாள் உதய் சார் என்னை அழைத்து “என் கடைசி படத்தை எடுத்துக் கொடுங்க..” என்றார். அவர் கேட்டதுபோல் நல்ல படத்தை எடுத்து தந்துவிட்டேன். அதற்கு ஒத்துழைத்த படக் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.
இந்த நேரத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல ஆசை. நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். ஆனால், அதை என் வாழ்நாள் முழுவதும் பாடிக் கொண்டே இருப்பேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி அதை யாழாக மாற்றி தெருத்தெருவாக மீட்டி வருவேன். உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக் கொண்டே இருப்பேன்…” என்றார்.









