full screen background image

நடனத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம்..!

நடனத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம்..!

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ல‌ஷ்மி’.

இந்தப் படத்தில் நடனப் புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இரவு சவேரா ஹோட்டலில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலை இயக்குநர் ராஜேஷ், படத் தொகுப்பாளர் ஆண்டனி, பேபி தித்யா, தயாரிப்பாளர் பிரதீக் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தை பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷோபியா பேசும்போது, “இந்த ‘லஷ்மி’ படம் என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்துவிட்டு இந்த  திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யாதான் என்னை அழைத்து ‘நீ இந்த படம் பண்ணனும்’ என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மிகப் பெரிய ஆளாக வருவார்கள்…” என்றார்.

lakshmi-press meet-2

நடிகர் சாம்பால் பேசும்போது, “வனமகன்’ படத்தை தொடர்ந்து எனக்கு இரண்டாவது முறையாக நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. பிரபுதேவா சார் உடன் நடித்தது மிகப் பெரிய அனுபவம். குழந்தைகளோடு நடித்தது மிகவும் சவாலாக இருந்தது..” என்றார்.

இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் பேசுகையில், “நான் இதுவரையிலும் நிறைய ஹாரர், திரில்லர் மாஸ் திரைப்படங்களுக்குதான் இசையமைத்திருக்கிறேன். முதன்முறையாக ஒரு டான்ஸ் படத்துக்கு இசையமைத்தது, அதுவும் நடனப் புயல் பிரபுதேவா அவர்கள் நடிக்கும், நடனமாடும் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சியான விஷயம்.

சின்ன வயதில் பிரபுதேவா சார் படங்களை ரசித்து பார்த்து விட்டு, அவர் படத்துக்கு இசையமைப்பது ஒரு சிறந்த உணர்வு. கரு படம் முடிந்தவுடன், மீண்டும் இந்த படத்துக்கு என்னை இசையமைக்க சொன்னார். இந்த படத்துக்குள் நடனம் தாண்டியும் பலவிதமான எமோஷன்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் எமோஷனல் மியூசிக்கல் டான்ஸ் படமாக வந்திருக்கிறது. இதில் குழந்தைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும்…” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “நாசர் சார் மகன் பாஷா என்னிடம் ‘விஜய் சார் ஒரு படம் பண்ண போறார். ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்.. நடிக்கிறாயா..?’ என்று கேட்டார்.

விஜய் சார் கதை சொன்னபோது உடனடியாக அப்போதே ‘ஓகே’ சொல்லி விட்டேன். திருமணத்திற்கு முன்பே ‘காக்கா முட்டை’, ‘ஆறாது சினம்’, ‘லஷ்மி’ படங்களில் குழந்தைகளுக்கு  அம்மாவாக நடித்து விட்டேன். அவர்கள் ரொம்பவே ஸ்பெஷல்.

ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்த படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அனுபவம்…” என்றார்.

lakshmi-press meet-1

படத்தின் நாயகனாக பிரபுதேவா பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்த ரவீந்திரன் சார் உடனேயே வாங்கி விட்டார், அதுவே படம் நல்லா இருக்கு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். ‘தேவி’, ‘ல‌ஷ்மி’ என்று விஜய்யின் இயக்கத்தில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘தேவி-2’ படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் ராஜேஷ். ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். குழந்தைகள் மக்ச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4, 5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்துதான் நிறுத்துவார்.

‘சலங்கை ஒலி’ என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்…” என்றார் பிரபுதேவா.

lakshmi-press meet-3

படத்தின் இயக்குநர் விஜய் பேசும்போது, “நான் ‘தேவி’ படம் இயக்கிக் கொண்டிருந்த போது, ப்ரதீக் மற்றும் ஸ்ருதியை சந்தித்தேன். இந்த கதையின் ஐடியாவை சொன்னேன். உடனடியாக இந்த படத்தை தயாரிக்க முன் வந்தனர்.

என்னதான் கஷ்டப்பட்டு படத்தை எடுத்தாலும் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் முக்கியம். அந்த நேரத்தில்தான் ரவீந்திரன் சார் படத்தை பார்த்து இந்த படத்துக்குள் வந்தார்.

‘பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும்?’ என்ற ஐடியாவை எனக்கு கொடுத்தது நிரவ்ஷாதான். ‘பிரபுதேவா சார் டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும்…’ என்றார்.

இதற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. குழந்தைகள் தேர்வுக்காக இந்தியா முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து கடைசியாகத்தான் தேர்வு செய்தோம். பேபி தித்யா இந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிப்பார்.

புிரபுதேவா வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரை போல ஒவ்வொரு நாளும் அதிக அக்கறை  எடுத்து உழைத்து கொடுத்தார். அவர் எங்கள் டீமுக்கு மிகப் பெரிய பில்லர். படத்துக்கு எது தேவை என்றாலும் பிரபுதேவா சாரிடம்தான் போய் நிற்பேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷோஃபியை ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு பரிந்துரைத்ததே ஐஸ்வர்யாதான். ஆண்டனிதான் என் சினிமாவின் முதல் ஆடியன்ஸ்.

இசையமைப்பாளர் சாமின் இசை படத்துக்கு மிகப் பெரிய ஆதரவாக அமைந்திருக்கிறது. ஒரு நல்ல, தரமான படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார் இயக்குநர் விஜய்.

Our Score