கவிஞர், எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட குட்டி ரேவதி, பெண் இயக்குநர்களை ஒன்றிணைத்து திரைப்படத் துறையில் நவீன சினிமாக் கதைகளை உருவாக்க ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
‘விறலி விடு தூது’ – திரைத் தயாரிப்பு நிறுவனம்!
நண்பர்களே,
பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும்.
இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப் பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்கதை எழுதும் கலைஞர்களைக் கண்டறியவும் இந்நிறுவனம் பாடுபடும்.
ஒரு வரிக்கதை உள்ளவர்கள், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள், திரைக்கதை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
viralividuthoodhu@gmail.com
(பி.கு: ‘விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்)
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் இணைந்து பணியாற்றலாம்..!
எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!