மனித வாழ்க்கையில் உண்மையையும், சத்தியத்தையும் கடைபிடிப்பது எவ்வளவு கடினமானது என்பதை பலர் அனுபவித்திருப்பார்கள்.
அந்தச் சத்தியம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு சோதனைக்கு உட்படுத்துகிறது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ப்ராமிஸ்’.
மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ சுயசரிதை முதல், அரிச்சந்திரனின் வரலாறுவரை சத்தியத்தின் மகத்துவம் பல வடிவங்களில் பேசப்பட்டு வந்துள்ளது.
அந்தப் பாரம்பரிய சிந்தனையை நவீன வாழ்க்கைச் சூழலோடு இணைத்து திரையில் பதிவு செய்யும் முயற்சியாக ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை இயக்கியுள்ள அருண்குமார் சேகரன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக நதியா சோமு நடித்திருக்கிறார். மேலும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.
வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரவண தீபன் இசையமைத்துள்ளார். பாடல்களை பாலா எழுதியுள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
என். நாகராஜ் வழங்கும் இப்படத்தை சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பார்வை வெளியானபோதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளர்-நடிகர் நட்டி வெளியிட்ட அந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து ஏபி இன்டர்நேஷனல் யூடியூப் தளத்தில் வெளியான டிரைலரும் பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு பின்னணிக் குரல் வழங்கிய தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், படத்தின் சில காட்சிகளைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்து படக் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அவரது பாராட்டு படக் குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் உணர்வுகளும் வாழ்க்கைச் சோதனைகளும் கலந்த படைப்பாக உருவாகியுள்ள இந்த ‘ப்ராமிஸ்’ படம், ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடாக வருகிற ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.









