RS Infotainment நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில், ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகி வருகிறது ‘கோ-2’ திரைப்படம்.
இயக்குநர்கள் விஷ்ணுவர்த்தன், சக்ரி டோலெட்டி ஆகியோருடன் பணிபுரிந்தவர் இயக்குநர் சரத். கோ-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டருக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில். பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா என்ற தேசிய விருது பெற்ற நடிகர்களை இந்தப் படத்திற்காக இயக்கிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அறிமுக இயக்குனர் சரத்.
“படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படம் எடுக்க எண்ணினேன், ஒரு பொலிடிக்கல் சப்ஜெக்ட் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும் கருதப்பட்டதால் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம்.
ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி கண்ட ‘கோ’, திரைப்படம் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் என்பதால் அதன் அடிப்படையில் ‘கோ-2’ என டைட்டில் வைத்தோம். ‘கோ-2’ திரைப்படம் ‘கோ’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. எனினும் ‘கோ’ படத்தில் இருந்த அதனை அம்சங்களும் இதிலும் இருக்கும். அவ்வளவுதான்.. இதனால் ‘கோ-2’ டைட்டில் எனக்கு அதிகபடியான பொறுப்பை அளித்திருப்பதும் உண்மை.
“தேசிய விருது பெற்ற நடிகர்களை இயக்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பிரகாஷ்ராஜ் சார் கதையை கேட்டு மகிழ்ந்து போனார். பின்னர் ஸ்கிரிப்ட் முழுதும் படித்தார். ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது நடிப்பு சிலிர்ப்பூட்டுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய விருது என்னும் இமாலயத்தை எட்டி பிடித்துள்ளார் பாபி சிம்ஹா. தன்னால் இதற்கு மேலும் செய்ய முடியும் என ஒவ்வொரு முறையும் நிருபிக்கும் ஒரு நடிகர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஒருவரை ஒருவர் யார் மிஞ்சுவது என்ற போட்டி காண்பதற்கு அற்புதமாய் இருக்கும்.
RS Infotainment நிறுவனம் இயக்குநர்களின் இடம். படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் எங்களது தயாரிப்பாளர் படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தையும் உடனுக்கு உடன் கிடைக்க செய்தார். லியோன் ஜேம்ஸ் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளோம். திரை இசையில் இவர் நிறைய சாதிப்பார் என்பதற்கு இவர் இசை அமைத்து கொடுத்துள்ள பாடல்களே அத்தாட்சி. எல்லா வகையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் அரசியல் வாழ்க்கையின் நிழல் உலக விஷயங்களை பற்றி கோடிட்டு காட்டும் இந்த ‘கோ-2’ திரைப்படம்…” என நிறைவு செய்தார் இயக்குனர் சரத்.