full screen background image

குறும்பட இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கும் நயன்தாரா..!

குறும்பட இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கும் நயன்தாரா..!

குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுதான் தமிழ்த் திரையுலகில் சமீபத்திய ட்ரெண்ட்.

அந்த வகையில் சமீபமாக ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குநர் சர்ஜுன்,   ஒரு தாய் அன்பின் வெளிப்பாட்டை  அற்புதமாக காட்டிய ‘Maa’ குறும்படத்தின் மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.

இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை  இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத் தந்துள்ளது  என்பதே தற்போதைய பரபரப்புச் செய்தி.

இந்தப் படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் தயாரிக்கவுள்ளார். ‘அறம்’ என்ற தரமான படத்தை தந்தவர் தயாரிப்பாளர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத்  தரமான தயாரிப்பாளர் – திறமையான இயக்குநர் – உச்ச நட்சத்திரத்தின் கூட்டணி வணிக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து இயக்குநர் சர்ஜுன் பேசுகையில், “வாய்ப்பு தேடி அலையும் இயக்குநர்களுக்கு  குறும்படங்கள் நல்ல பாதையாகும்.

எனது முதல் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நான் எழுதி, இயக்கிய ‘Maa’ குறும் படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராஜேஷ் சார் திடீரென்று ஒரு நாள் எனக்கு போன் செய்து “ஏதாவது சுவாரஸ்யமான கதையுள்ளதா..?” என கேட்டார். உடனே நான் அப்போது என்னிடம் தயாராக இருந்த ஒரு கதையை அவரிடம் சொன்னேன்.

நயன்தாரா மேடத்திற்காகத்தான் அவர் கதையைக் கேட்டார் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. பிறகு அவர் என்னிடம்  இக்கதையை நயன்தாரா மேடத்திற்காகத்தான் கேட்டதாகச் சொன்ன பொழுது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான திகில் படம். இந்த கதையை நான் எழுதிய பொழுது ஒரு பெரிய நடிகர் இதில் நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். தற்பொழுது நயன்தாரா மேடம் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் கிடைத்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

கதையை கேட்டு மிகவும் ரசித்தார்  நயன்தாரா மேடம். எனது  ‘Maa’ குறும் படத்தை அவர் பார்த்ததாகவும் அதன் கதையும் மற்றும்  அதனை எடுத்தவிதமும் அவருக்கு பிடித்திருந்ததாகவும் நயன்தாரா மேடம் என்னிடமே கூறினார்.

நயன்தாரா மேடமும், தயாரிப்பாளர் ராஜேஷ் சாரும்  என் மீதும் எனது கதையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் ஒரு தரமான படத்தை தந்து காப்பாற்றுவேன்…” என்றார் இயக்குநர் சர்ஜூன்.

Our Score