இன்று, அந்த மகத்தான ஆன்மீகப் பாரம்பரியம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக உருவெடுத்து, இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் புதிய பயணத்தைத் APF Production House தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறது.
இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பே ” பிரஜாபதி ” நாடகத்தை இயற்றி அரங்கேற்றிய முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன், இந்தப் படத்தை இயக்குகிறார்.
‘பிரஜாபதி’ படம் குறித்து இயக்குநர் முனைவர் B.ரூபர்ட் பேசும்போது, “இந்த ‘பிரஜாபதி’ படம் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல.
மனித குலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு இறைப் பணியாகும்.
பிரஜாபதி என்பது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், அற்புதங்கள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மாபெரும் திரை அனுபவமாக உயிர்ப்பிக்கும் விவிலியத் திரைப்படமாகும்.
வேதாகமத்தின் அடிப்படையில், உயர்தர திரைப்படத் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த ‘பிரஜாபதி’ படம், எல்லா மொழிகளையும், எல்லா கலாச்சாரங்களையும், எல்லா தலைமுறைகளையும் சென்றடையும் வகையில் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
‘பிரஜாபதி’ – மக்களின் திரைப்படம். இது மக்கள் பங்களிப்பில் (Crowdfunding) உருவாகும் ஒரு இறைப் பணி.
“இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு” என்ற நோக்கத்தை நனவாக்கும் வகையில் இந்த ‘பிரஜாபதி’ திரைப்படம் Crowd Funding தளத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த ‘பிரஜாபதி’ படத்தில் நடித்திருப்பவர்கள், திரைப்படத் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முறை நடிகர், நடிகைகள் அல்லர்.
அவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பிரஜாபதி’ நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தியாக உணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இந்தப் படைப்பில் பங்கெடுத்துள்ளனர்.
விரைவில் எங்களின் ‘பிரஜாபதி’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையில் அனைவரும் காண்பீர்கள்” என்றார்.






















