Maple Leafs Productions நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், E.V.கணேஷ்பாபு, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கட்டில்’.
இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் இயக்குநரும், நாயகனுமான E.V.கணேஷ் பாபு பேசும்போது, “நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன்தான். 2023-ம் ஆண்டின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி.
நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள்தான். அவரது ஊக்கத்தில்தான் இந்தப் படம் உருவானது. நடிகை சிருஷ்டி டாங்கே இந்தக் ‘கட்டில்’ படத்தில் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித்ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்துதான் பாடல்களைப் பாடுகிறார். இந்தப் படத்தில் நான்கு மொழிகளிலும் அவர் பாடியதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர் பேசும்போது, “நான் பத்திரிகைகளில் போட்டோகிராஃபராகத்தான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் பத்திரிக்கையாளன் என்று சொல்லிக் கொள்வதில் இப்போதும் பெருமையடைகிறேன். லெனின் சார் கூப்பிட்டு இந்தக் கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமான கதையாக இந்தக் கட்டில் படத்தின் கதை இருந்தது. சென்னை, காரைக்குடி பகுதிகளில்தான் மொத்தப் படத்தையும் படமாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும்..” என்றார்.
நடன இயக்குநர் ‘மெட்டி ஒலி’ சாந்தி பேசும்போது, “அந்தக் காலத்தில் படங்களில் காதலுக்கு, குழந்தைகளுக்கு எனத் தனித்தனியாக பாடல்கள் இருக்கும். கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் காட்சிகள் கமர்ஷியலாக மாறிவிட்டன. இதை நினைத்து பெரிதும் வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது.
இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். சிறந்த இசையைக் கொடுத்தமைக்காக இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக இந்தக் கட்டில் படத்தை உருவாக்கியுள்ளார்..” என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா பேசும்போது, “இந்த வாய்ப்பை தந்த, சினிமாவுக்கு காட்ஃபாதராக இருக்கும் லெனின் சாருக்கு நன்றி. மிக அற்புதமாகப் படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கும் நன்றி. வைட் ஆங்கிள் ரவி சார் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அது இந்தக் ‘கட்டில்’ படம் மூலமாக மாறியிருக்கிறது. இந்தப் படத்தில் வைரமுத்து சாருடன் பணி புரிந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசும்போது, “இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். தமிழ் பாரம்பரியத்தை நிச்சயமாக இந்தப் படம் எடுத்துக்காட்டும். இந்தப் படத்தை நான் மிகவும் நம்புகிறேன். படத்தின் பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென்று நம்புகிறேன். இ.வி.கணேஷ்பாபு சார், லெனின் சார், ஶ்ரீகாந்த்தேவா சார், வைட் ஆங்கிள் ரவிசங்கரன் சார் இவர்கள் நால்வரும்தான் இந்தப் படம் சிறப்பாக வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.











