full screen background image

கட்சிக்காரன் – சினிமா விமர்சனம்

கட்சிக்காரன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், புளூஹில்ஸ் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

தோனி கபடி குழு’, ‘வேட்டைநாய்’ ஆகிய படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன், இந்தப் படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி ரசியல் தலைவராக நடித்துள்ளார். காமெடியனாக A.R. தெனாலியும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் அப்புக்குட்டி, மற்றும் அசுரவதம்’ படத்தின் இயக்குநரான மருது பாண்டியன் ஆகிய இருவரும் படத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளனர். நடிகர் நாசரின் தம்பியும் ஜீவி- 2’ படத்தில் இன்ஸ்பெக்டராக கலக்கிய ஜவகரும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட் ராய், குமரவடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பு – சரவணன் செல்வராஜ், இணைத் தயாரிப்பு – மலர்கொடி முருகன், ஒளிப்பதிவு – மதன்குமார், படத் தொகுப்பு – யு.கார்த்திகேயன், இசை – ரோஷன் ஜோசப், பின்னணி இசை – C.M.மகேந்திரா, பாடல்கள் – நா.ராசா, பாடகர்கள் -ஹரிச்சரண், வேல்முருகன்.

’தோனி கபடி குழு’ படத்தை இயக்கிய இயக்குநர் ப.ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க, முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும், அவரது தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் கதை.

ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும். ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது.

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான  இழப்பீடு  கேட்பதும்தான்  இந்தக் கட்சிக்காரன்’ படத்தின் கதை.

வீடு, மனைவி, மக்கள் என்று பாராமல் கட்சி கட்சி என்று காலம் முழுக்க உழைத்துவிட்டு அரசியல்வாதியின் நிஜமுகம் தெரியும்போது சலிப்படைந்து அரசியலில் இருந்து விலகி விடுவது பல உழைப்பாளி அரசியல் தொண்டர்களின் சோகக் கதை.

ஆனால் சலிப்படையாமல் சோர்வடையாமல்  என்றாவது ஒரு நாள் நமக்கும் ஒரு காலம் வரும். புதிய வழி கிடைக்கும். வாழ்வில் ஒளி பிறக்கும் என்று கனவோடு காத்திருக்கும் தொண்டன்தான் இந்தக் கட்சிக்காரன்’ படத்தின் கதாநாயகன் சரவணன்.

நம்முடைய வாழ்வில் நம் கண்ணெதிரே எதிர்ப்படும் கட்சித் தொண்டர்களில் ஒருவனாக அவனைப் பார்க்கலாம். அப்படித்தான் அந்தக் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் நாயகன்  சரவணன், தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது ,விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான். இவற்றுக்கெல்லாம் செலவுக்குப் பணம் இல்லாதபோது தன் மனைவியின் தாலியை அடகு வைக்கக்கூட தயங்குவதில்லை.

இப்படி இரவு பகல்  பாராது தன்னுடைய கட்சிக்காகவும், தன் தலைவருக்காகவும் உழைக்கிறான் நாயகன்.  அவனது உழைப்பைப் பாராட்டி அவனுக்குத் தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில்  எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது.

தன் கனவு சிதைந்து விட்டதே என்று எண்ணி ஏமாற்றப்பட்டவன் சோர்வடைந்து  விலகிவிடவில்லை. யோசித்துப் பார்த்தபோது  மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெறுகிறான். அவன் மனைவி அஞ்சலியும் அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். ஏமாற்றியவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள்.

ஆகவே உண்மைத் தொண்டனான சரவணன் தன்னை ஏமாற்றிய தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான். அது மட்டுமல்ல தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு போராடுகிறான். அரசியல்வாதிகளின் மிரட்டல் போக்கால், அவன்கூட வந்தவர்கள் இடையில் கழன்று கொண்டாலும் அவன் உறுதியாக நிற்கிறான். முடிவு என்ன என்பதுதான் இந்தக் கட்சிக்காரன்’ படத்தின் கதை.

இந்தக் கட்சிக்காரன் பாத்திரம் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு வேறொன்று   போன்று தோன்றாது. நம் கண் முன்னே ஊருக்கு ஊர் தெருவில் கட்சிக்காகச்  சுற்றித் திரியும் அப்பாவித் தொண்டர்களை அந்தப் பாத்திரம் நினைவூட்டுகிறது. அவர்களில் ஒருவன்தான் இந்த  சரவணன் என்று படம் பார்ப்பவர்களுக்குத தோன்றும்.

எனவே அந்தக் கதாபாத்திரத்துடன் நாம் எளிதாக நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் கிராமத்து மண்ணின் நிறத்தை எழுதி வைத்துள்ள அந்த அப்பாவி முகமும், வெள்ளந்தி குணமும்  அவரை அந்தப் பாத்திரத்தில் அழகாக பொருத்திக் கொள்கின்றன.

அவரது மனைவி அஞ்சலி’யாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி  அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவி கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறார். நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார். அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி. அளவான அழகு, நடிப்பு.

மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி ஒரு தலைவருக்குரிய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலியும் நீள வசனங்கள் பேசி தனது அங்க சேட்டைகள் மூலம் ஆங்காங்கே சிரிப்பையும் வரவழைக்கிறார்.

பல பெரிய பட்ஜெட் படங்களில்கூட காணக் கிடைக்காத சிறப்பான ஒளிப்பதிவு இந்தப் படத்தில் கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.

படத்திலிருக்கும் இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமையாக இருந்தன.  ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற டூயட் பாடலை நாமே இணைந்து பாடும் அளவுக்கு காதில் விழுகிறது. இந்தப் பாடல் காட்சியில் கிராமத்து அழகைக் கண் முன்னே காட்டியிருக்கிறார்கள். இன்னொரு பாடலான ‘கட்சிக்காரன் கட்சிக்காரன்’ என்கிற பாடலும், மாண்டேஜ் காட்சிகளும் கதை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.

எதிலும் முதலீடு செய்யும்போது அதன் பலனை எதிர்பார்ப்பது நியாயம்தானே? வங்கியில், பங்குச் சந்தையில், நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துவிட்டு வட்டியுடன் பெருகும் பணத்தை எதிர்பார்ப்பதில்லையா..?

அதுபோலத்தான் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை வைத்து தொண்டர்கள் உழைப்பை முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யும் தொண்டனுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா ? என்று கேள்வி கேட்கிறது இந்தப் படம். ஏமாற்றப்படும் தொண்டர்கள் கேள்வி கேட்க வேண்டும். தங்கள் உழைப்பிற்கு நியாயம் கேட்க வேண்டும் என்று கூறுகிறது இந்தப் படம்.

அது மட்டுமல்ல இந்த அரசியல்வாதிகளின்  தொண்டர்கள்  மீதான அலட்சியத்தையும், மக்கள் விரோதப் போக்கையும், ஊழல்களில் கொடி கட்டிப் பறப்பதையும், பணம் சம்பாதிக்க எதிரெதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையும் பல்வேறு வசனங்களின் மூலம் இப்படம் கேள்வி கேட்கிறது.  விழிப்புணர்வு ஏற்படவும் வைக்கிறது.

படத்திற்குப் பலம் துணிச்சலான  வசனங்கள்தான். ஆனால் வெறும் வசனங்களை மட்டும் வைத்து ஒரு படத்தை நிறைவு செய்துவிட முடியாது. படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து படம் முழுவதும் அனைவருமே பேசிக் கொண்டே இருக்கிறார்கள். வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டே இருப்பதுதான் சில நேரங்களில் நமக்கு சலிப்பூட்டுகிறது. ஆனாலும் அந்த வசனங்கள் அனைத்தும் அரசியல்வியாதிகளை தோலுரிக்கும் வசனங்களாகவே இருப்பதால் ரசிக்கவும் முடிந்திருக்கிறது.

பல பெரிய கதாநாயகர்கள் தாங்கள் நடித்த அரசியல் படங்களில் சொல்லத் தயங்கிய, மறுத்த, மறந்துபோன பல வசனங்கள் இந்தப் படத்தில் தைரியமாக இடம் பெற்றுள்ளன.

அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மனதில் பதிந்திருக்கும் பல அபிப்ராயங்களை மாற்றும் வகையில் துணிச்சலான வசனங்களில் மூலம் சில உண்மைகளைப் போட்டு உடைக்கிறார்கள். அப்படிச் சொல்ல வந்த கருத்துக்காக இந்த முயற்சியை  ஆதரிக்கலாம்.

காட்சிகளில்  இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்து இயக்கியிருந்தால் முழுத் தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.

மொத்தத்தில் இந்தக் ‘கட்சிக்காரன் ‘ மிக எளிய மனிதர்களின் அமைதிப்படை’ என்று சொல்லலாம்..!

RATING : 3.5 / 5

Our Score