தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் நடனத்திற்காக, பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார்.
வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில், இந்த செயலி(app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app) நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
JOOPOP HOME-ன் அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த சிறப்பான பணிகள், இனி இணையம் வழியே நடன உலகில் அனைவரையும் ஊக்குவிக்கும். ஷெரீஃப் மாஸ்டரின் வெற்றிக்கான பாதை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.
ஷெரீஃப் 2003 ல் தனது சொந்த நடனப் பள்ளியான ஷெரீஃப் டான்ஸ் கம்பெனி (SDC) மூலம் டான்ஸ் கற்பிக்கத் துவங்கினார். அவர் தனது தனித்துவமான நடனத் திறமையை மேம்படுத்தி, ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிறுவனம் மூலமே நடிகை சாய் பல்லவி டான்ஸில் அறிமுகமாகி கலக்கினார் என்பது குறிப்பிடதக்கது.
2009-ல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய “உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா?” என்ற நடனப் போட்டியில் வென்று, தேசிய அளவில் புகழ் பெற்றார் ஷெரீஃப். இந்த பிரம்மாண்ட வெற்றி அவருக்கு அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு திரைப்பட நடன இயக்குநராக அவரது திரை வாழ்க்கைக்கான கதவுகளையும் திறந்து, பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.
ஷெரீஃப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் 250 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் அவர் பணிபுரிந்த படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ராஜ்குமாரின் சமீபத்திய பிளாக் பஸ்டர் படமான ‘அமரன்’ படத்தில் ஹிட் பாடல்களுக்கு ஷெரீஃப் நடனம் அமைத்துள்ளார். மேலும் கார்த்திக்குடன் இணைந்து ‘இறைவி’ முதல் வரவிருக்கும் சூர்யாவின் 44-வது படம்வரையிலும் தொடர்ந்து பணியாற்றி, அவரது படைப்பாற்றல் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.
JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.
கார்த்திக் சுப்பராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் JOOPOP HOME பற்றிய ஐடியாவை பற்றி, ஷெரிப் சுமார் 6-7 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மீது அவர் இடைவிடாத நம்பிக்கை கொண்டு, இறுதியாக உயிர்ப்பித்தது குறித்து, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஷெரீப்பின் பயணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது, “ஆரம்ப காலத்தில் இருந்தே ஷெரீப்பின் அசைக்க முடியாத நடனத் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். 2009 இல் நான் இயக்கிய போட்டியில் கூட, அவருடைய தனித்த பார்வையும் ஆர்வமும் வெளிப்பட்டது. அவர் JOOPOP HOME ஐத் தொடங்குவதைப் பார்ப்பது, எனக்கு ஒரு பெருமையான தருணம், ஏனெனில் ஒரு மிகப்பெரிய கனவை காண்பதோடு, அதை அடைய முடியும் என்கிற உற்சாகத்தை இது தருகிறது..” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது, “ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல; அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப் நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்.” என்றார்.
நடன இயக்குநர் ஷெரிப் பேசும்போது “ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009 இல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும், நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்.” என்றார்.
பயிற்சிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் நடன உலகில் பிரத்யேகமான திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளை வழங்கும், ஒரு விரிவான தளமாக இந்த செயலி செயல்படும். இது அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் என்று ஷெரிப் நம்புகிறார்.
இவ்விழா இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் கைதட்டல்களுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது, ஷெரிப் மாஸ்டரின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு மட்டுமல்லாது, முழு நடன சமூகத்திற்கும் இந்த தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.











