ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷூடனான பிரிவுக்குப் பிறகு தினமும் ஏதாவது ஒரு ரூபத்தில் சமூக வலைத்தளங்களில் அடிபட்டுக் கொண்டேயிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.
நேற்றைக்கு நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது டிவீட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டார் ஐஸ்வர்யா.
இது குறித்து ராகவா லாரன்ஸ் பேசுகையில், “இது ஒரு புதிய முயற்சி. விரைவில் இந்தச் சந்திப்பு எதற்கு என்று ஐஸ்வர்யாவே சொல்லுவார்..” என்றார்.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ‘துர்கா’ என்ற புதிய படம் துவக்க நிலையில் உள்ளது. அந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவர்கள் விலகிவிட்டார்கள்.
ஒருவேளை ஐஸ்வர்யா அந்தப் படத்தை இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
ஏற்கெனவே தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை ஐஸ்வர்யா ரஜினி இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









