ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.
இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தெலுங்குலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு இணைந்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் உருவாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15-வது திரைப்படமாகவும், ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல் கல் திரைப்படமாகவும் இருக்கும். ‘தில்’ ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷூம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ‘தில்’ ராஜு ஷங்கர்-ராம் சரணுடன் இணைந்தது குறித்து பேசும்போது, “இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடனும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரணுடனும் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தேசிய அளவில் இந்தியாவின் அத்தனைவிதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டு வரவிருக்கிறோம்” என்றார்.
படப்பிடிப்பு விவரங்கள், ராம் சரணுடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன்-2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கடைசியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகள்.. உடல் நலக் குறைவு.. காலில் ஆபரேஷன், தேர்தல் கால சுற்றுப்பயணம் என்று பல்வேறு வேலைகளினால் கமல்ஹாசன் இந்தியன்-2-வுக்குத் தயாராக இல்லாததால் படமும் தேங்கி நிற்கிறது.
அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் இனி தேர்தல் முடியும்வரையிலும் இந்தியன்-2 திரைப்படம் துவங்காது என்பது நிச்சயமான ஒன்று.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தப் படத்தை எடுத்து முடிக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் நினைத்துதான் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டிருக்கலாம். எனவே, இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.