full screen background image

“என் சாதனைக்குத் துணையாய் நின்றது இளையராஜாவின் இசைதான்..” – பாரதிராஜா பேச்சு..!

“என் சாதனைக்குத் துணையாய் நின்றது இளையராஜாவின் இசைதான்..” – பாரதிராஜா பேச்சு..!

‘இசைஞானி’ இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் உலகம்மை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலையில் இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இசைஞானி’ இளையராஜா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும், ‘இசைஞானி’ இளையராஜாவும் பேசும்போது ஒருவரையொரூவர் மாற்றி, மாற்றி கலாய்த்துக் கொண்டனர்.

பாரதிராஜா பேசும்போது, “என்னோட சாதனைக்கு எல்லாம் உறுதுணையா இருந்தது இளையராஜாதான். அதில் சந்தேகமே இல்லை. இன்னைக்கு வரைக்கும் என் படம் பேசுதுன்னா, நான் எடுத்த காட்சிகளைவிட, இளையராஜாவின் பின்னணி இசைதான் அதற்குக் காரணம்.

ஒரே ஒரு தடவதான் ரீல்ல பாப்பான். உடனே பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்சுருவான். அதன் பிறகு வாசிச்சானா, அப்படியே சல்லு சல்லுனு போய் இசை விழும். இளையராஜா ஐந்து விரல்லயும், ஐந்து சரஸ்வதி இருக்கா.

நாங்க ரெண்டு பேரும் ஒரு காலத்துல, நாடகத்துல நடிக்கும்போது, அங்கயும் வந்து என்னைய கலாட்டா பண்ணி, டயலாக் பேச விடமாட்டான்…” என்று பாரதிராஜா பழைய நினைவுகளை பகிர…

அப்போது குறுக்கிட்ட இளையராஜா, “விஷயம் என்னன்னா?  அல்லி நகரத்துல நாடகம் நடக்குது. ஒரு சீனுக்கு அப்புறம் டிரெஸ்ஸை மாத்திட்டு போறதுக்கு, பாரதிராஜாகிட்ட டிரெஸ் இல்ல.. நான் கீழே உட்காந்து ஆர்மோனியம் வாசிச்சிட்டு இருந்தேன். அப்போ பாரதிராஜா என்கிட்ட வந்து “சட்டைய கழட்டு, சட்டை கழட்டு”ன்னு சொன்னான். “நான் வாசிச்சுட்டு இருக்கேன்”யா சொன்னேன். ஆனா, பாரதிராஜா “இந்த சீனுக்கு போடணும்.. கழட்டு”ன்னு சொல்லி, என் சட்டைய மாட்டிட்டு போயி சீனுல நடிச்சுட்டான்.

இதுல எனக்கென்ன பிரச்சனைனா, அடுத்த நாள் நான் தெருவுல அந்த சட்டையத்தான் போட்டுட்டு போனும். அப்போ எல்லாரும் பாரதிராஜா சட்டையத்தானே நான் போட்டுட்டு வரேனு பேசுவாங்கனு யோசிச்சேன்.

அடுத்த சீனுல, பாரதிராஜா புட்ஸ் பாலிஷ் போட்டுட்டு இருந்தாரு.. நான் உடனே அதே சட்டைய மாட்டிட்டு மேடைக்கு போயி, பாலிஷ் போடுனு சொன்னேன். அதைத்தான் பாரதிராஜா கலாட்டானு சொல்றார்” என்று தன் நினைவுகளை பகிர்ந்தார்.

பிறகு பேசிய பாரதிராஜா, “ராஜா மேடையில ரொம்பவும் கலாய்ப்பான். நம்மள நடிக்க விடமாட்டான். இது நாடகம்.. எல்லாரும் பாக்கிறாங்கனு சொன்னாலும், கண்டுக்கவே மாட்டான். இன்னைக்கு வர அதைத்தான் பண்றான்…” என்றார்.

Our Score