full screen background image

அட்வகேட் கமிஷனரிடம் ‘கத்தி’ படத்தின் ஸ்கிரிப்ட்டை ஒப்படைக்க முடியாது-கோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு..!

அட்வகேட் கமிஷனரிடம் ‘கத்தி’ படத்தின் ஸ்கிரிப்ட்டை ஒப்படைக்க முடியாது-கோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் கதை மீது உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை 16–ந் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மீஞ்சூர் கோபி என்பவர் ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறித்து முன்பே இந்தப் பதிவில் சொல்லியிருந்தோம்.

இந்த வழக்கில் அட்வகேட் கமிஷனரிடம் கத்தி படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்காமல், முருகதாஸ் தரப்பு மீண்டும் கோர்ட் படியேறியுள்ளது.

முருகதாஸ் தனது வக்கீல் மூலமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  “மனுதாரர் கோபி என்ற நயினார் என்பவரை எனக்கு யார் என்றே தெரியாது. அவரை இதுநாள்வரையிலும் நான் பார்த்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது. அவரிடம் கதை எதுவும் நான் கேட்கவில்லை. அவரது கதையைத்தான் நான் படமாக எடுக்கிறேன் என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மேலும், இந்த விவகாரத்தில் வக்கீல் கமிஷன் மூலம் விசாரணை நடத்துவது என்பது சரியானதாக இருக்காது. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக உள்ளேன். கடின உழைப்பினால் முன்னேறிய எனக்கு சினிமாத் துறையில் நற்பெயர் உள்ளது. தற்போது, முன்னணி நடிகரான விஜயை வைத்து படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் வெளிவருவதற்கு முன்பு, படத்தின் கதையை வக்கீல் கமிஷனிடம் கொடுப்பது என்பது சரியாக வராது. எனவே, வக்கீல் கமிஷன் அமைத்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்…” என்று கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.கணேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நேரத்தில் கத்தி படத்தின் முதல்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடெக்சன் பணிகள் துவங்கிவி்ட்டதாகவும் முருகதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்குள் இந்தக் கட்டப் பஞ்சாயத்துகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Our Score