full screen background image

‘தாதா-87’ படம் அனுமதியில்லாமல் ரீமேக் செய்யப்படுவதாக புகார்

‘தாதா-87’ படம் அனுமதியில்லாமல் ரீமேக் செய்யப்படுவதாக புகார்

நடிகர் கமலஹாசனின் அண்ணனான சாருஹாசனின் நடிப்பில் உருவான ‘தாதா-87’ திரைப்படம் சட்டப்படியான உரிமம் பெறாமல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய் ஸ்ரீஜி புகார் கூறியுள்ளார்.

நடிகர் சாருஹாசனின் நடிப்பில் உருவாகி 2 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான திரைப்படம் தாதா-87. இத்திரைப்படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தயாரித்து இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் பிரபல நடிகரான சாய்குமாரின் நடிப்பில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த ரீமேக்கிற்கு உரிய அனுமதியை தமிழ்ப் பட தயாரிப்பாளர்களிடத்தில் இருந்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீஜியிடமிருந்தும் அந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர்கள் பெறவில்லையாம். உரிமம் இல்லாமல் படம் எடுத்திருப்பதாக இயக்குநர் விஜய் ஸ்ரீஜி புகார் கூறியுள்ளார்.

அவர் இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் எழுதி இயக்கி ஜி மீடியா  கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா-87’ படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

தற்சமயம் நான் ‘பவுடர்’, ‘பப்ஜி’ ஆகிய படங்களை இயக்கி வருகிறேன். இன்று காலை YouTube-ல்  நடிகர் சாய்குமாரின் நடிப்பில் ஒன் பை டூ’ என்ற பெயரில் ‘தாதா-87’ படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ரஜினியின் ‘காலா’ டீசருடன், ‘தாதா-87’ படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தத அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் நடிப்பில் சில காட்சிகளை மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள். இதனைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

ஒன் பை டூ படக் குழு  என்னுடைய   கற்பனையையும், என் உழைப்பையும் திருடியுள்ளது. என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப் பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது.

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியலை மாற்றுவதற்கு சமமானது என பெரியவர்கள் கூறுவார்கள்.

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை  திருட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா-87’ படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின்படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்…” என்று தெரிவித்துள்ளார்.

 
Our Score