நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான கார்ரொன்யா கேத்ரின் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
‘களவாணி-2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விமல் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘சோழ நாட்டான்.’
இந்தப் படத்தை ஹரிஷ் பிலிம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாரி வள்ளல் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – பிரகாஷ், பாடல்கள் – கலைக்குமார், மணி அமுதவன், சபரீஷ், எழுத்து, இயக்கம் – பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா.
இந்தப் படத்தில் கதாநாயகியாக கார்ரொன்யா கேத்ரின் நடிக்கவிருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இவர் ‘Bangari Balaraju’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘SD’, ‘Itlu Mee SriMathi’ மற்றும் ‘Uttara’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்காக தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாவது பற்றி நாயகி கார்ரொன்யா கேத்ரின் பேசும்போது, “எனக்கு தமிழ்நாட்டையும் தமிழ்ப் படங்களையும் ரொம்பவே பிடிக்கும், இயக்குநர் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போதே எனக்கு பிடித்துவிட்டது. நான்தான் ஸார் பண்ணுவேன் என்று உடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் எனக்கு தமிழில் நல்லதொரு வரவேற்பை பெற்றுத் தரும். தமிழிலும் சிறந்த நாயகியாக ஒரு ரவுண்டு வருவேன் என்று நம்புகிறேன்..” என்றார்.