ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’.
படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – K.P.வேல்முருகன், படத் தொகுப்பு – யுவராஜ், இசை – P.R.ஸ்ரீநாத், பாடல்கள் – S.ஞானகரவேல், தயாரிப்பு – ஜெ.தன்ராஜ் கென்னடி, எழுத்து, இயக்கம் – ஆர்.டி.குஷால் குமார்.
காதல் பொய்.. காமம்தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம்தான் அதிகம் என்பது புரியும். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக் கருத்து இதுதான்.
நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம்தானே..? அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.
இப்படி எதிரெதிர் கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்த பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.