சேவை வரியினால் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த சேவை வரியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டு நடிகர் விஜய், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடித விவரம் :
“பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமா துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால், இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன்.
சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல. அரசுக்கு பல கோடி வருவாயை ஈட்டித்தரும் துறையாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சினிமா கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.
மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால், கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக, சினிமா தொழிலில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும், விரக்தியாலும் வேறு தொழிலுக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமானால், திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிப்பதோடு, இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மேலும் கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன் கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் சேவை வரியை ரத்து செய்ய போராடினார்கள். மனுக்களும் கொடுத்தார்கள். இருப்பினும் திரையுலகுக்கு எதிராக சேவை வரி உள்ளது.ஆகவே சினிமா துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கியும் வரும் சேவை வரியை நீக்கி, அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும் பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தைப் பிடிக்க உற்சாகமூட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறியிருக்கிறார்.
இந்தக் கடிதத்தை நடிகர் விஜய் தமிழிலேயே மோடிக்கு எழுதி அனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுதான் மோடி அரசு இனிமேல் அனைத்துத் துறைகளிலும் ஊடகப் பணிகளில் ஹிந்தியே பிரதான மொழியாக இருக்கும் என்ற உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.