வரவிருக்கும் படங்களை பற்றி கலந்துரையாடலில் காரசாரமாக விவாதிக்கப்படுவது ‘மசாலா படம்’ திரைப்படம்தான்.
பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆல் இன் Pictures விஜய் ராகவேந்தர் தயாரித்துள்ளார்.
வெவ்வேறு குணங்களுடைய மூன்று கதாபாத்திரங்களை சுற்றி சுழல்கிறது இந்த ‘மசாலா படம்.’ சமூக வலைத்தளங்களில் திரைப்படங்களை வறுத்து எடுக்கும் போக்கை பற்றிய கதை.
சினிமாவைப் பற்றி பல படங்கள் வந்து இருக்கலாம். ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும், சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றிய முதல் சினிமா இந்த ‘மசாலா படம்’தான்.
பாபி சிம்மா மற்றும் மிர்ச்சி சிவா இருவரும் இரண்டு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கூடவே அறிமுக நடிகர் கௌரவ்வும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தன்னுடைய நடிப்பு அனுபவம் பற்றியும், தனது முன் கதைச் சுருக்கதையும் இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் கெளரவ்.
“பொறியாளர் கல்வி தகுதி பெற்ற எனக்கு நடிப்பின் மேல் தீவிரக் காதல் உண்டு. அதற்காகவே பிரத்தியேகமாக உள்ள பயிற்சி அரங்குகளில் பயின்றேன். எல்லா மொழிப் படங்களையும் பார்த்து நடிப்பை பயின்றேன்.
இந்த நேரத்தில்தான் இயக்குனர் லக்ஷ்மணை நேரில் சந்தித்தேன். அவர் இந்த ‘மசாலா பட’த்தில் ஒரு ப்ளேபாய் கதாப்பாத்திரம் உள்ளதாகவும் அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதுவதாகவும் கூறி என்னை தேர்ந்தெடுத்தார்.
பல மொழிப் படங்களை பார்த்து ரசித்திருந்த எனக்கு இந்தக் கதைக் களம் மிக வித்தியாசமாக தெரிந்தது. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, நான் உட்பட மூன்று நாயகர்கள் இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில்தான் நாங்கள் ஒரே பிரேமில் வருவோம். அந்த அளவுக்கு வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் லக்ஷ்மண்.
இந்த மாதம் 9-ம் தேதி திரைக்கு வெளிவர உள்ள ‘மசாலா படம்’ நிச்சயம் வெற்றி பெரும் என படம் பார்த்தவர்கள் கூறும்போது எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் லக்ஷ்மண், தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி…” என்கிறார் இளம் நடிகர் கௌரவ்.