சாதாரணமான சென்சிட்டிவ் மேட்டர் என்றாலே ‘ஒன் லைனை புடிச்சிரலாமா’ என்று பேனாவும், நோட்டுமாக கிளம்பிவிடுவார்கள் கோடம்பாக்கத்து கதாசிரியர்கள்.
தேர்தலில் எதிரொலிக்க்க் கூடிய விஷயமென்றால் விட்டுவிடுவார்களா என்ன..?
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் சோக முடிவை மையமாக வைத்து அதற்குள்ளாக ஒரு படத்தைத் துவக்கிவிட்டார்கள்.
இதில் நடிகை அருந்ததி அந்த விறைப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுந்தரா இளங்கோவன் இந்தப் படத்தை இயக்குவதன் மூலமாக கோடம்பாக்கத்தில் புதிய இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிருத்திகா பிலிம் கிரியேஷன் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் இந்தப் படத்திற்கு கதையெழுதி தயாரிக்கிறார்.
அருந்ததி ஜோடியாக நடித்திருப்பவர் புதுமுகம் ராம்குமார். மேலும் நாசர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முத்துராமன், சுதாகர், ராஜேந்திரநாத், சம்பத் ராம் உட்பட பல உன்னத கலைஞர்கள் நடித்துள்ளனர்.
இசை – செல்வ கணேஷ், பாடல்கள் – கபிலன், ஒளிப்பதிவு – ஸ்ரீராஜன் ராவ், கலை இயக்கம் – ஸ்ரீமன் பாலாஜி, சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, நடனம் – ராதிகா, இணை தயாரிப்பு – ஜி.கே.முருகன்.
இந்த ‘அர்த்தநாரி’ திரைப்படத்தை பற்றி இயக்குநர் சுந்தரா இளங்கோவன் பேசும்போது, “இப்போதைய காலக்கட்டத்திலும் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றுவரையிலும் நீடித்து வருகிறது. இருந்தாலும், தொழில் துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவலக் கேடுகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன.
எத்தனையோ பெண்கள் இந்தத் துறையில் சாதித்து இருந்தாலும், இன்னமும் இதைப் போன்ற சில துறைகள் ஆண்களின் மேலாதிக்கத்தில்தான் இருக்கிறது. மேற்கூறிய இந்த விஷயங்கள் மட்டுமல்ல. காவல் துறைக்கு பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு நேரும் சோதனைகளும் அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றிய கதைதான் இந்த ‘அர்த்தநாரி’ திரைப்படம்.
அருந்ததி போலீஸ் அதிகாரியாக நடிக்க பெருமளவில் உழைத்திருக்கிறார். என்னுடைய சில போலீஸ் நண்பர்கள் மூலம் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த உழைப்பு படத்தில் தெரிகிறது. அறிமுக நடிகரான ராம்குமார் நடிப்புக்கு புதியவர் என்றே கருத முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் முத்தமிழ் படத் தயாரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தரமான படமாக வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு வழங்கியதை என்னால் மறக்கவே முடியாது.
‘அர்த்தநாரி’ திரைப்படம் இன்றைய தேதியில் மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பெரிதாக அலசப்படும் ஒரு விஷயத்தை போலவே இருப்பது தற்செயலான விஷயம்தான்..”’ என்று அடித்துச் சொல்கிறார் இயக்குநர் சுந்தரா இளங்கோவன்.
எல்லா இயக்குநர்களும் இதையேதான் சொல்வாங்க.. அதையெல்லாம் நம்பிருவோமா..?