‘என்னமோ நடக்குது’ படத்தை அடுத்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார் தயாரித்துள்ள அடுத்த படம் ’அச்சமின்றி’.
இதிலும் விஜய் வசந்தே கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திக்ரகனி நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் கருணாஸ், மற்றும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஸ்வின், ஜெயகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ், இசை – பிரேம்ஜி அமரன், கலை – சரவணன், சண்டை பயிற்சி–கணேஷ் குமார், எடிட்டிங் – பிரவீன்.K.L, தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம், வசனம் – ராதாகிருஷ்ணன், தயாரிப்பு – டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார், கதை, திரைக்கதை, இயக்கம் – ராஜபாண்டி.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராஜபாண்டி, “இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை முன் வைத்துதான் இந்த ‘அச்சமின்றி’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். ‘என்னமோ நடக்குது’ படம் எப்படி கதையோடு கமர்ஷியல் கலந்து சொல்லப்பட்டதோ அதுபோலத்தான் இந்த ‘அச்சமின்றி’ படமும் அழுத்தமான கதையை உள்ளடக்கியது. செம ஸ்பீடான திரைக்கதையில் படம் பரபரப்பாக இருக்கும்.
இது சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது…? அதேபோல் இந்தச் சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக நிறைய செலவு செய்து உருவாக்கியிருக்கிறோம்..” என்றார்.
‘அச்சமின்றி’ படம் இந்தாண்டு கடைசி வெள்ளிக்கிழமையான வரும் டிசம்பர் 30-ம் தேதியன்று உலகமெங்கும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.