‘பர்மா’ படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நவரச திலகம்.’
இந்தப் படத்தில் மா.கா.பா. ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வித்தியாசமான வேடம் ஒன்றில், ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – ரமேஷ், இசை – சித்தார்த் விபின், பாடல்கள் – யுகபாரதி மோகன்ராஜ், கலை – சீனு, நடனம் – தினேஷ், ஸ்டண்ட் – மகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – லோகு – சங்கர், தயாரிப்பு மேற்பார்வை – ஆஸ்கார் நாகராஜ், இணை தயாரிப்பு – கே.ஜெயச்சந்திரன் ராவ், தயாரிப்பு – சுதர்சன வெம்புட்டி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காம்ரன்.
படம் பற்றி இயக்குநர் காம்ரன் பேசும்போது, “இந்த ‘நவரச திலகம்’ முழுக்க, முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது. தங்களது பெற்றோர் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யும் ஹீரோவும், அவரது நண்பரும் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
தயாரிப்பளார் சுதர்சன வெம்புட்டி அவர்களிடம் இந்த கதையை சொல்ல முயற்சி செய்தபோது அவர் வெளிநாட்டில் இருந்தார். அதனால் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுதான் இந்த கதையை சொன்னேன். சுமார் 3 மணிநேரம் கதையை போனிலேயே கேட்டார். எனக்கு தெரிந்து தொலைபேசியில் முழு கதையையும் கேட்டு படம் தயாரித்த ஒரே தயாரிப்பாளர் அவர்தான். தொலைபேசியில் முழு கதையையும் சொல்லி படம் இயக்கிய இயக்குநர் நானாகத்தான் இருப்பேன். படம் பேமிலி, செண்டிமெண்ட், காமெடி என கலகலப்பாக உருவாகி உள்ளது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்தது மட்டுமல்லாமல் ஒரு காமெடி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் இம்மாதம் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது..” என்றார்.









