SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’.
இந்தப் படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா இவர்களுடன் கௌரவத் தோற்றத்தில் ஷகீலாவும் நடித்துள்ளார்.
எழுத்து, இயக்கம் – சாய் பிரபா மீனா, ஒளிப்பதிவு – பால்பாண்டி, இசை – சந்தோஷ் ராம், படத் தொகுப்பு – நவீன் குமார், சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா, கலை இயக்கம் – கிரண் & பண்டு, இணை இயக்குநர் – ஜே டி, தயாரிப்பாளர் – ராம்குண்டலா ஆஷா, பத்திரிக்கை தொடர்பு – A ராஜா.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் சம்பத்ராம் பேசும்போது, “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ என்ற டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.
இயக்குநர் சாய் பிரபா மீனா பேசும்போது, “இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள்தான். ஜெய் ஆகாஷ் சார் மூலம்தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள்.
தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா என்னை நம்பி படத்தை இயக்கும் வாய்ப்பினை தந்துள்ளார். சிறு பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான அன்பு செல்வன் மிகப் பெரும் ஆதரவைத் தந்தார். ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார்.
பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இப்படம் நன்றாக வர வேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மிகப் பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன்.
சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை. அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே ‘கிறுக்கன்’ என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னை மாதிரி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.
தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர்.கே.அன்பு செல்வன் பேசும்போது, “இயக்குநர் முதலில் ‘யோக்கியன்’ என ஒரு படம் எடுத்தார். அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக வேண்டும்.
இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், பட ஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுப் போகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும். சினிமாவில் யாரையும் ஏமாற்றக்கூடாது. நான் இருக்கும்வரை யாரையும் ஏமாற்ற விடமாட்டேன்..” என்றார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் பேசும்போது, “இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்ன வேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநராக வேண்டும் என்று எடுத்த படம்தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் ‘இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்’ என்ற இந்தப் படத்தை இயக்கியுள்ளான்.
டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள்தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய்தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.
நடிகை ஷகீலா பேசும்போது, “எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும்தான் இந்தப் படத்தில் நடித்தேன். எனக்கு நல்ல வேடம் தந்திருக்கிறார் இயக்குநர். இப்படியொரு படைப்பாளியை உருவாக்கியதற்காக ஜெய் ஆகாஷூக்கு என் நன்றிகள். படத்தில் நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர். எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்துதான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார்.
நடிகர் பிர்லா போஸ் பேசும்போது, “சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப் பெரிய ஆளுமை கொண்டவர். அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக் கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர். மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் மிகப் பெரிய படம். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வர வேண்டும். அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன்..” என்றார்.
நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது, “என்னை சினிமாவிலும், அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள்.
என் வெற்றிக்கு, என் வாழ்வுக்கு காரணம் சினிமாதான். சினிமா பலரை வாழ வைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலேயே இன்று நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன். மிகப் பெரிய உழைப்பாளி. இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.













