full screen background image

சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய அரசாணை ரத்து..!

சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய அரசாணை ரத்து..!

வரும் பொங்கல் தினம் முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவிகிதி டிக்கெட்டுக்களை வழங்கலாம் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அளித்த அனுமதியை தற்போது தமிழக அரசே ரத்து செய்துள்ளது.

தமிழ்த் திரையுலகத்தினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இதனால் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரும் ’மாஸ்டர்’ மற்றும் ’ஈஸ்வரன்’ திரைப்படங்களின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், “எங்களுடைய அனுமதியில்லாமல் தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை எப்படி அனுமதிக்கலாம்…?” என தமிழகத்தின் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதினார்.

அதுமட்டுமின்றி இன்றைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் சென்னை ஐகோர்ட் ஆகிய நீதிமன்றங்களில் நடந்த இது தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் ‘இந்த 100 சதவீத இருக்கைகள் அனுமதி’க்கு நீதிமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனால், தமிழக அரசு 100 சதவீத இருக்கை அனுமதிக்கான அரசாணையை வாபஸ் பெறுவதாக தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று மாலை வெளியிட்ட உத்தரவில், “தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற தற்போதைய உத்தரவே தொடர்ந்து நீடிக்கும். 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக்” குறிப்பிட்டுள்ளது.

மேலும், “உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் முகக் கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Our Score