full screen background image

“பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன? ஓடலைன்னா என்ன?” – கே.ராஜனின் கோபப் பேச்சு

“பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன? ஓடலைன்னா என்ன?” – கே.ராஜனின் கோபப் பேச்சு

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் தொடாதே’.

ப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ், இசை – ராஜா, பாடல்கள் – பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் – நாகேந்திரன், உதவி இயக்கம் – பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி இயக்கம் – சிவப்பிரகாஷ், படத் தொகுப்பு – நாகர்.ஜி, நடன இயக்கம் – பாரதி, இணைத் தயாரிப்பு – எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு – எஸ்.ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், எழுத்து, இயக்கம் – எஸ்.அலெக்ஸ்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும், தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இயக்குநர் ராசி அழகப்பன், இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸாலி, இயக்குநர் விருமாண்டி, நடிகர்கள் முத்துக்காளை, கூல் சுரேஷ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தத் ‘தொடாதே’ படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பார்த்தபோது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

காதல் சுகுமார் காமெடி நடிகராக இருக்கும்போதே அவரை நான் ரசித்து பார்ப்பேன். இன்று ஹீரோவாக நடிக்கிறார். அவர் நிச்சயம் நன்றாக நடித்திருப்பார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள். உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள்தான் பெரிய படம். பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம்.

பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய்தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள்.

இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க.. இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா..? அதிலும் நஷ்டம்தான் வருகிறது. நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லல. நீங்கள் வேற மாதிரி போட்றாதீங்க.

இப்பக்கூட என்னை வெளியில் பேட்டி எடுத்தாங்க. அரை மணி நேரம் எடுத்த பேட்டியில், ‘பீஸ்ட்’ படம் பற்றி என்கிட்ட கேக்குறாங்க. பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன.. ஓடலனா எனக்கென்ன… என்கிட்டபோய் ‘பீஸ்ட்’… ‘பீஸ்ட்’.. என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை.

காரணம், நான் விஜய்கிட்ட தேதி கேட்டு நிக்க போறதல்ல. பணம் கேட்டு நிக்க போறதல்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் குரல் கொடுக்கிறேன். தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன்.

மதுவால் ஏற்படும் தீமைகளை சொல்லும் இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். மதுவால் ஏழைகளின் குடும்பமும், அவர்களுடைய வருமானமும் எப்படி  பாதிக்கப்படுகிறது என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் என் பகுதியில் இருக்கும் பல மதுக்கடைகளை மூட நான் முயற்சித்து வருகிறேன். இப்போதுகூட இது பற்றி முதல்வர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன், அவரை அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

Our Score