தற்போதைய தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களும், புதுமுக நடிகர்களும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியைக் கொடுக்கிறார்கள். இதனால் புதியவர்களின் வருகையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில், உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து புதியவர்கள் உருவாக்கும் படம்தான் இந்த ‘வியாசர்பாடி’ திரைப்படம்.
இந்தப் படத்தில் ஹீரோவாக சுரேஷ் அறிமுகமாக, ஹீரோயினாக மீரா அறிமுகமாகிறார். மற்றொரு ஹீரோவாக தனுஷ் ராஜ்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகியோர் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும், கிருஷ்ணகிரி ருக்கு, சின்னாளப்பட்டி சுஜி ஆகியோர் வில்லிகளாக நடிக்கிறார்கள். ஆயுஷி திவாரி என்ற மும்பை நடிகையும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முக்கிய வில்லனாக குங்பூ ராஜநாயகம் நடிக்கிறார்.
இசை – சபேஷ் சாலமன், பாடல்கள் ஆர்.புவனகுமார்-சபேஷ் சாலமன், கலை – ஆர்.ராம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சி.தனுஷ் ராஜ்குமார் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் தனுஷ் ராஜ்குமார் கூறுகையில், “படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது வடசென்னை சம்மந்தமான படம் என்பதை. ஒரு ரவுடியால் பாதிக்கப்படும் நான்கு வாலிபர்கள், அந்த ரவுடியை எதிர்க்கொண்டு அவரால் பாதிக்கப்பட்ட ஒரு ஏரியாவை காப்பாற்றி, அந்தப் பகுதி சிறுவர்களுக்கு கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதனால் வரும் எதிர்ப்புகளும், அவரற்றை அவர்கள் எதிர்கொள்வதும்தான் இந்த ‘வியாசர்பாடி’ படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.
ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் துவங்க உள்ளது.