full screen background image

வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் ‘வில் அம்பு’ திரைப்படம்

வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் ‘வில் அம்பு’ திரைப்படம்

வரும் பிப்ரவரி 12-ம் தேதி ‘வில் அம்பு’ படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநரான ரமேஷ் சுப்ரமணியம் நீண்ட பேட்டியளித்தார். 

அது இங்கே :

“நான் இப்படத்தின் கதையை எழுதும்போது புதிய கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன்.

அப்படி யோசிக்கும்போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. ஆனால், ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே..! ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாகக் கையாளலாமா? அல்லது வேறு ஏதாவது புதுமையாகச் செய்யலாமா என்று யோசித்தபோது. திரைக்கதையைப் புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையைப் புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன்.

எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்துதான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும்.

ஒன்று, இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணைக் காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள். மோதல் வரும். இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பார்கள்.

Vil-Ambu-Director

ஆனால் இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில்கூட ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேச மாட்டார்கள். ஆனால் கதை இவர்களைச் சுற்றியே நகரும்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தியும், அருளும் எந்த ஒரு காட்சியிலும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள். மற்றும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாது.

படத்துக்கு ‘வில் அம்பு’ என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்தத் தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு ‘வில் அம்பு’ என்று தலைப்பு வைத்தோம்.

படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்கிறார்கள்.

கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹரிஷ் கல்யாண் வில்லனாகவும் அம்பாகவும் மாறி மாறி வருவார்கள். படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை.

உண்மைக்கு மிக அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நாங்கள் கோவையில் படம் பிடித்தோம். கோவையை மிகவும் துல்லியமாகவும், புதிய கோணத்திலும் படம் பிடித்துள்ளோம்.

நாயகன் ஸ்ரீ கோவையில் உள்ள சேரி பகுதிப் பையனாக வருகிறார். மற்றொரு நாயகனான ஹரிஷ் கல்யாண் விஸ்காம் படித்து முடித்து சினிமாவுக்குதான் போக வேண்டும் என்று இல்லாமல் வீடியோ கடை வைத்தும் முன்னேற முடியும் என்று வாழ்ந்து வருபவர்.

சேரிப் பகுதியில் இருக்கும் ஸ்ரீ சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்பவராக வருகிறார். ஹரிஷ் கல்யாண் மற்றும் அவருடைய தந்தை சம்பந்தமான காட்சியொன்று மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஹரிஷ் கல்யாணின் நிஜ தந்தைதான் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே, சமஸ்க்ரிதி மற்றும் சாந்தினி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நவீன் இசையில் அனிருத் ரவிசந்தர் பாடியுள்ள ‘ஆள சாச்சிபுட்ட கண்ணால’ பாடல் மிகப் பிரபலம். இந்த சூப்பர் ஹிட் பாடல் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது…” என்றார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.

Our Score