நன்றி நவில்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக திரை உலகில், காண கிடைக்காத, கேட்க கிடைக்காத, உணர முடியாத வார்த்தையாகிவிட்டது என்பதை பொய்யாக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி, அந்த படத்தின் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒரு விழா நடந்தது.
இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்தது பற்றி பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “திரைப்படம் என்பது கலை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. மனித உணர்வுகளும், நன்றி உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டிய துறையும்கூட. இரவு, பகல் பாராமல் இந்த படத்துக்காக உழைத்த இந்த உன்னத நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல தருணம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.
பணம் என்ற விஷயத்தையும் தாண்டி எந்தவொரு கலைஞனுக்கும் கவுரவம் ஒரு முக்கிய விஷயம். நானும் அடிப்படையில் ஒரு தொழிலாளி என்பதால் அவர்களின் உணர்வு புரியும். அந்த புரிதலின் வெளிப்பாடுதான் இந்த விழா..” என்றார்.