full screen background image

வல்லமை – சினிமா விமர்சனம்

வல்லமை – சினிமா விமர்சனம்

பேட்டிலர்ஸ் சினிமா நிறுவனத்தின் சார்பில் இந்த ‘வல்லமை’ படத்தை தயாரித்து, கதை, பாடல்கள், எழுதி இயக்கியிருக்கிறார் கருப்பையா முருகன்.

இந்தப் படத்தில் பிரேம்ஜி – சரவணன் (தந்தை), திவதர்ஷினி – பூமிகா (மகள்), தீபா சங்கர் – (டாக்டர்), வழக்கு என் முத்துராமன் – (காவல் ஆய்வாளர்), சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்), சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்), சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்), விது – பாபு (பெட்ரோல் திருடன்),போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்) ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் – ஜி.கே.வி, ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, படத்தொகுப்பு – சி.கணேஷ் குமார், கலை இயக்குநர் – எஸ்.கே.அஜய், பத்திரிக்கை தொடர்பு : நிகில்முருகன்​

எளிமையான மனிதர்களின் கண்ணீரைத் துடைப்பது யார் என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கவில்லை. தங்களுடைய கண்ணீரை துடைப்பார்கள் என்று எதிர்பார்த்து அந்த ஏழை மக்கள் காத்திருந்தாலும் பணமும், அரசியலும், செல்வாக்கும், அதிகாரமோ ஒன்று சேர்ந்து அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறது.

அந்த நேரத்தில் தான் அந்த ஏழை எளிய மக்களும் அதிகாரத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். அப்படி களத்தில் இறங்கும் ஒரு அப்பா, மகளின் கதைதான் இந்த ‘வல்லமை’ என்ற திரைப்படம்.

கிராமத்திலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்கிறார் மாற்றுத் திறனாளியான பிரேம்ஜி. சென்னையில் ஒரு மாடி வீட்டில் ஒண்டு குடித்தன வீட்டில் பள்ளிக்கு செல்லும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான தனது மகளுடன் குடியேறுகிறார் பிரேம்ஜி. இரவுகளில் சுவரொட்டி ஒட்டும் வேலையை செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று ஒரு நாள் அவருடைய மகள் அவளுக்கே தெரியாமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதை மருத்துவரால் தெரிந்து கொள்கிறார் பிரேம்ஜி. இதை அவரது மகளும் ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்கிறார்.

இந்த கொடுமையான செயலை செய்தது யார் என்று அப்பாவும் மகளும் பேசிப் பேசியே பழைய கதைகளை திரும்பிப் பார்க்கிறார்கள். மகளுடைய எண்ண ஓட்டத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று அந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது யாரால் நடந்திருக்கும் என்பதை அவர்கள் யோசித்து அதன் நபரை கண்டறிகிறார்கள்.

கடைசியாக அந்த நபரை காவல்துறையில் சொல்லி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசிக்கும்பொழுது சட்டம் எந்தவிதத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யாது என்பதை புரிந்து கொண்டு தாங்களே அந்த கயவனுக்கு தக்க பாடத்தை கற்றுக் கொடுக்க முனைகிறார்கள்.

இவர்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற்றதா..? அந்த கயவன் யார்? அவனுக்கும், இவர்களுக்கும் எந்த தொடர்பு என்பதுதான் இந்த வல்லமை படத்தின் கதை சுருக்கம்.

பிரேம்ஜிக்கு மிகவும் பொருத்தமான வேடம்தான். ஒரு அப்பாவியான ஒரு கதாபாத்திரம். அதுவும் மாற்றுத் திறனாளி வேறு… யாரை நம்புவது… யாரை நம்பாமல் இருப்பது.. என்ன செய்வது.. எப்படி பேசுவது என்பதெல்லாம் எதுவும் தெரியாமல் பார்த்த உடனே அனைவரையும் நம்பி விடக்கூடிய ஒரு அசால்ட்டான கதாபாத்திரம். மகள் மீது அபாரமான ஒரு பாசம். அவள்தான் தன்னுடைய எதிர்காலம் என்று அவளுக்காகவே வாழ நினைக்கும் ஒரு சராசரி அப்பா. அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக கச்சிதமாக செய்திருக்கிறார்.

மகளைத் தாண்டி வேறு எதுவும் தனக்கு பெரிதில்லை என்பதே அவர் உணர்ந்து அந்த வேலையில் இறங்கும் பொழுது நிச்சயம் அவருடைய செயலை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கண்களால் நாம் ஆசீர்வதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அந்த வகையில் அவருடைய நடிப்பு இருந்திருக்கிறது.

அவருடைய மகளாக நடித்தவரும் சிறப்பாக ஓரளவுக்கு நடித்திருக்கிறார். அவருடைய குளோசப் காட்சிகளில் கொஞ்சம் அனுதாபத்தைப் பெறும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் தான் தீபா சங்கர் சவுண்டே விடாமல் அமைதியாக, அடக்கமாக ஒரு மருத்துவராக பேசி நடித்திருக்கிறார் சக்கரவர்த்தியாக நடித்த ரஜீப் மேனன் ஒரு வில்லனுக்குரிய தோற்றம் இருந்தாலும் வில்லனுக்குரிய அந்த கெபாசிட்டி.. அவர் ஏன் அதை செய்தார் என்பதற்கான விளக்கமெல்லாம் இல்லாமல் போனதால்… ஏதோ ஒரு வில்லனாகவே நமக்கு தெரிகிறார். அவருடைய கார் டிரைவர் மிகவும் அலட்சியமாக சவால் விட்டு விட்டு போகிறார்.

இன்னொரு பக்கம் சூப்பர்குட் சுப்ரமணி நல்லதொரு போலீஸ் எட்டாக வந்து சென்று இருக்கிறார். தீனா ஒரு இன்ஸ்பெக்டராக நடித்து முடித்திருக்கிறார். இப்படி அனைவருமே ஏதோ ஒரு வகையில் நடிக்க வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவு நிச்சயமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாக அமைந்துள்ளது. ரொம்பவும் மெனக்கெடாமல் ஒளிப்பதிவுக்கான தனியாக ஸ்கோப் எதுவும் இல்லாமல், கிடைத்த இடங்களில் மிக துல்லியமான ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

மூன்று பாடல் காட்சிகளும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் காட்சிகளை மாண்டேஜ் காட்சிகளாக வைத்திருந்து… அதில் ஆழமில்லாததாலும் பாடலை மட்டுமே நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

படத்தில் நம்மக்கான பிரச்சனை என்னவென்றால் இப்படி ஆளாளுக்கு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாங்களே தீர்ப்பளித்துக் கொள்கிறோம்.. நாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு போனால் எப்படி?

என்னதான் நடக்கின்ற கதை.. நடந்த கதை என்றாலும் ஒரு பெண்ணை ஒரு பத்தாம் வகுப்பு 15 வயது பெண்ணே.. நாமளே அவனை கொலை பண்ணிடலாம் என்று சொல்வதெல்லாம் நிச்சயமாக ஒரு அதிகப்படியான மனநிலை மனோபாவம்.

இது இளைஞிகளின் மனதை கெடுக்கின்ற வேலை என்று என்பதால் நாம் இதை வன்மையாக கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் மிக சாதூர்யமாக கொலை செய்துவிட்டுத் தப்பித்துப் போவது என்பதெல்லாம் லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்பது போல உள்ளது.

சென்னையில் சிசிடிவி கேமராவே இல்லாதது போலவும் ஒரு 15 வயது பெண்ணை உடன் வைத்துக் கொண்டு கொலை செய்ய போய் மிக ஈசியாக கொலை செய்துவிட்டு தப்பித்து போவது என்பதெல்லாம் முடியாத காரியம். ஆனால் அதை முடிவதுபோல முடிந்தது போல முடித்தார்கள் என்பது போலவே படத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர்.

அதையும் தாண்டி படத்தின் இயக்குநர் இன்னும் கொஞ்சம் இயக்குதலை கச்சிதமாக செய்திருக்க வேண்டும். ஒரு நாடகத்தனமான இயக்கம் படம் முழுவதும் நிரம்பி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இயக்குதலில் நிச்சயம் ஒரு போதாமை இருக்கிறது. இதனாலேயே படத்தை வெகுவாகப் பாராட்ட முடியவில்லை..!

RATING : 2.5 / 5

 

Our Score