‘வணக்கம் சென்னை‘ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘சுமோ’.
இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
இயக்கம் – எஸ்.பி.ஹோசிமின், தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்– Dr.ஐசரி K.கணேஷ், நிர்வாக தயாரிப்பு – K.அஷ்லின் குமார், திரைக்கதை, வசனம் – மிர்ச்சி சிவா, ஒளிப்பதிவு – ராஜிவ் மேனன், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு – பிரவீன் கே.எல்., கலை இயக்கம் – கார்த்திக், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது.
இந்தோ–ஜப்பானிஸ் கூட்டுத் தயாரிப்பான இந்த ‘சுமோ‘ திரைப்படம், ஜப்பானிய மல்யுத்த வீரர்களான சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் ஜப்பானிய சுமோ வீரர் வேடத்தில் ஜப்பானில் பிரபலமான சுமோ வீரரான யோஷினோரி தாஷிரோ நடித்துள்ளார்.
இதேபோல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வி.டி.வி.கணேஷ் நடித்திருக்கிறார். மிர்ச்சி சிவாவுடன் படம் முழுவதும் பவனிவரவுள்ள யோகிபாபுவின் நகைச்சுவை இந்தப் படத்திலும் களை கட்டியுள்ளது.
நடிகர் சிவா இந்தப் படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல்முறையாக திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கேட்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோபிளேன் ஒட்டுது” என்றுகூட சொல்வார்கள். அது இந்தப் படத்தின் இயக்குநருக்கு நிச்சயமாக பொருந்தும்.
அருமையான அழகான காமெடி திரைப்படத்தை எடுத்திருக்கிறேன் என்று அவர் பல மேடைகளில் பேசியதை கேட்டு ஆர்வமாக போய் படம் பார்க்க உட்கார்ந்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..!
அகில உலக சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டுள்ள மிர்ச்சி சிவா, ஒரு ரெஸ்டாரண்டில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அந்த ரெஸ்டாரண்ட் பின்புறம் உள்ள கடற்கரையில் ஜப்பானிய சுமோ வீரர் ஒருவர் மயங்கி நிலையில் கிடக்கிறார்.
அவரை சிவாதான் முதலில் பார்க்கிறார். மயக்கத்தில் இருந்த அந்த ஜப்பான்காரரை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அந்த சுமோ வீரன் குழந்தைத்தனமாக இருக்கிறார் என்பதை உடனடியாக கண்டுபிடித்து வருகின்ற வழியில் அவருக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எல்லாம் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து கொஞ்சிக் குழாவுகிறார் சிவா.
அந்த ரெஸ்டாரெண்ட்டை நடத்தும் விடிவி கணேஷுக்கு ஜப்பானிய குடிமகனை அருகில் வைத்திருப்பது ஆபத்து என்பது அடுத்த நாள்தான் தெரிகிறது. கேளம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அந்த ஜப்பானிய ஆளை ஒப்படைத்து விட்டு வரும்படி சிவாவிடம் சொல்ல அவரும் ஜப்பான்காரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கே இருக்கும் உலக மகா அறிவாளியான இன்ஸ்பெக்டர் அந்த ஜப்பானிய ஆளைப் பார்த்துவிட்டு எதைப் பற்றியும் கேட்காமல் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிரு சொல்லி அனுப்பி வைக்கிறார்.
போலீசே சொல்லிவிட்டது பிறகு என்ன என்று சொல்லி அந்த ஜப்பானிய ஆளை கூடவே வைத்து வளர்க்கிறார் மிசா. ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானிலிருந்து தப்பி வந்தவன் என்பதை உணர்ந்து திருப்பி அனுப்புவதற்காக விசாரித்து டூரீஸ்ட் நிறுவனத்தில் பேசி பணம் கொடுத்து ஜப்பான் செல்ல விசாவை ஏற்பாடு செய்து இவரை திருப்பி அனுப்ப முயல்கிறார்கள்.
ஜப்பானில் இந்த சுமோ வீரனை பலரும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். மாபெரும் சுமோ வீரனான இவர் திடீரென்று காணாமல் போய்விட்டதால் ஜப்பானிய அரசே தேடுகிறதாம். ஜப்பானிய மக்களே தேடுகிறார்களாம்.
கடைசியில் என்ன நடந்தது..? ஜப்பான் ஆள் ஜப்பான் போய் சேர்ந்தானா..? தன் குடும்பத்துடன் இணைந்தானா..? அவன் எப்படி மகாபலிபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்..? அவனுடைய முன் கதை என்ன..? என்பதெல்லாம் இந்தப் படம் ஸாரி காவியத்தின் பின் கதையாக வருகிறது.
ஏற்கனவே நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் மிர்ச்சி சிவா. இதிலும் அப்படியேதான். கேமரா முன்பாக வந்து வசனம் பேசிவிட்டு போயிருக்கிறார். சில இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதுகூட நமக்கு புரியவில்லை. உதடு பிரியாமல் பேசும் நாயகிகளுக்கு சவால் விடும் வகையில் மிர்ச்சி சிவா, இந்தப் படத்தில் உதடு பிரித்துக் கஷ்டப்படாமலும், தனக்கு வந்த நடிப்பை மட்டுமே காண்பித்து ஒப்பேற்றியிருக்கிறார்.
உண்மையில் படத்தில் நடித்திருப்பது ஜப்பானிய சுமோ வீரராக நடித்தவரும் டிடிவி கணேஷூம்தான். ஜப்பானிய வீரனின் குழந்தைத்தனமும், செயலும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறது.. அவ்வளவுதான்.
படத்தில் நடிப்புதான் கிலோ என்ன விலை என்றால் இயக்குநரின் இயக்குதலோ அதை விடவும் அதிகம். ஜப்பானில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட காட்சிகள் அதி அசுர மொக்கைகள். அந்தப் பேச்சுக்களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதுகூட இயக்குநருக்குத் தெரியவில்லை. ஜப்பானிய மொழிக்கு டிரான்ஸ்லேஷனை திரையில் போட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு டப்பிங் செய்கிறோம் என்று சொல்லி அத்தனை காட்சியையும் சொதப்பி வைத்திருக்கிறார் இயக்குநர்.
இடையில் ஒரே ஒரு ஸ்லைடு போட்டு தமிழக ரசிகர்களுக்காக இதில் தமிழில் சப் டைட்டில் போடப்படுகிறது என்று சொல்லி இருந்தால் நலமாக இருந்திருக்கும். ஆனால் பேசி முடித்த பின்பும் தமிழ் டப்பிங் ஒலிக்கிறது. இதில் எங்கே நடிப்பை பார்ப்பது.. மகா கேவலமான ஒரு இயக்கம் இந்த படத்தில் அமைந்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்தை இந்தப் படம் போல் எந்தப் படத்திலும் இவ்வளவு அசிங்கமாக காட்டியது இல்லை. அவ்வளவு அசிங்கமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இன்னும் கொஞ்சம் பணத்தை செலவழித்து நல்ல கேமராவை வாங்கி பயன்படுத்தியிருக்கலாம்.
பிரியா ஆனந்தை விடாமல் விரட்டி, விரட்டி காதலிக்கும் யோகி பாபுவிடம் இரண்டு நாள் கால்ஷீட் வாங்கி அவருடைய காட்சிகளை மொத்தமாக படமாக்கி இருக்கிறார்கள் போலும்… ஓரளவுக்கு ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார் யோகி பாபு.
பிரியா ஆனந்தின் அப்பாவான தமிழ் வாத்தியாரான நிழல்கள் ரவி பகல் பொழுதில் நெற்றியில் திருநீர் பட்டையோடு திருக்குறளை வாசித்துவிட்டு தமிழின் மேன்மைகளை சொல்வாராம்.. இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் அமர்ந்து சரக்கு அடிப்பாராம்.. இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் எதற்கு என்றே தெரியவில்லை.. ஆனால், இது தேவையில்லாத ஒரு பஞ்சாயத்து.
ஒன்றுமே இல்லாத ஒரு கதை, திரைக்கதை, வசனத்தை வைத்து… ஒன்றுமே இல்லாத நடிப்பில் உருவாக்கிவிட்டு.. ஒரு படத்தை கெத்தாக எடுத்து தியேட்டருக்கு கொண்டு வந்துவிட்டு, “நாங்கள் படத்தை எடுத்து வந்துவிட்டோம்.. தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்..” என்று அழைப்பதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும்.
இந்தப் படத்தின் இயக்குநருக்கு அந்த தில் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தைரியமாகப் படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துவிட்டார். படம் பார்ப்பவர்கள் நிலைமைதான் கவலைக்கிடமாக உள்ளது..!
RATING : 1.5 / 5