‘மாஸ் மகாராஜா’ என்று தனது ரசிகர்களால் மாஸாக அழைக்கப்படும் தெலுங்கு நடிகரான ரவி தேஜா முதன்முறையாக பான் – இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்தப் படத்தை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்.
இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
எழுத்து & இயக்கம். – வம்சி, தயாரிப்பாளர் – அபிஷேக் அகர்வால், தயாரிப்பு நிறுவனம் – அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், வெளியிடுபவர் – தேஜ் நாராயணன் அகர்வால், இணை தயாரிப்பாளர் – மயங்க் சிங்கானியா, வசனம் – ஸ்ரீகாந்த் விஸ்ஸா, இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – ஆர்.மதி, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – அபினாஷ் கொல்லா, மக்கள் தொடர்பு – யுவராஜ்.

இந்த ‘டைகர்’ நாகேஸ்வரராவ் திரைப்படம் ஒரு உண்மைக் கதையாகும். 1970-களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட மோசமான மற்றும் துணிச்சல்மிக்க திருடன் ‘டைகர்’ நாகேஸ்வரராவ்.
இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வம்சி, இந்த ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் திரைக்கதையை பல ஆய்வுகளுக்கு பிறகு முழுமையாக எழுதி நிறைவு செய்திருக்கிறார்.
அவருடைய கனவுப் படைப்பான இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. இதற்காகவும் இயக்குநர் வம்சி பிரத்யேகமாக உழைத்திருக்கிறார்.
இந்த ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் பிரம்மாண்டமான வெளியீட்டு விழா இன்று மாதப்பூர், எச்ஐசிசியில் உள்ள நோவடெல்லில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்பபடத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் அற்புதமான பின்னணி இசையுடன் மோஷன் போஸ்டர் வெகுஜன ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
‘டைகர்’ நாகேஸ்வரராவின் வாழ்க்கை கதை, ஒரு திரைப்படத்திற்கான முழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இது போன்ற வெகுஜன மக்களை கவரும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ரவி தேஜா பொருத்தமானவர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆற்றல்மிக்க இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா தன்னுடைய தோற்றத்தை முழுமையாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, தோற்றப் பொலிவு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு முன் ரவி தேஜா ஏற்றிராத கதாபாத்திரம் இது.
இன்றைக்கு வெளியாகியிருக்கும் இந்த மோஷன் போஸ்டரின் காட்சிகள் உயர் தரம். பின்னால் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருக்க… உயிரை துச்சமாக மதித்து கையில் சாட்டையுடன் ரவி தேஜா நின்று கொண்டிருக்கும் காட்சி உள்ளபடியே பிரமிப்பை உண்டாக்குகிறது.
ரவி தேஜா சட்டையின்றி நின்று தனது கம்பீரமான உடலைக் காட்டிக் கொண்டு நிற்பது அவர் ஏதோ அதிரடியான ஆக்ஷனில் இறங்கக் காத்திருக்கிறார் என்று கட்டியம் கூறுகிறது.
அத்துடன் ‘டைகர்’ நாகேஸ்வரராவ் ஏராளமான ஆக்சன் காட்சிகளுடன் பிரம்மாண்டமான செலவில் உருவாகவிருப்பதால், இந்தப் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.











