full screen background image

கிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..!

கிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..!

ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் ‘தொரட்டி’.

ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ராஜாமுகமது படத் தொகுப்பு செய்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC  பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

இத்திரைப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரையுலகத்தினர் பலரும் “மிக, மிக அற்புதமான படம் இது” என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.

நேற்று மாலை இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. 

IMG_9946

விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசும்போது, “தொரட்டி’ என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் ‘தொரட்டி’ ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது.

இந்தப் படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர்தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது.

சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள்.  எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்… ” என்றார்.

Thorati (1)

நடிகர் அழகு பேசும்போது, “”1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப் படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை என் கண் முன்னே காட்டியது.

இந்தக் கதையை தயாரித்த தயாரிப்பாளர்  பெரிதும் பாராட்டுக்குரியவர்.  இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்ததைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் மாரிமுத்து கதை, திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். இந்தக் கதையில் ஒரு காதலும் இருக்கிறது.

இப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார்.

இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து, ‘நீங்க எத்தனையோ படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும்’ என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது.

இந்தப் படக் குழுவினர் இன்னும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை SDC பிக்சர்ஸ் வெளியிடுவது மகிழ்ச்சியான விஷயம்…” என்றார்.

IMG_9908

தயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசும்போது, “எல்லோரும் ‘வணக்கத்தில்’ ஆரம்பிப்பார்கள். நான் ‘நன்றி’யில் துவங்குகிறேன். ‘தொரட்டி’ பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தீர்கள். ‘தொரட்டி’ படம் பார்ப்பவர்களுக்கு  இதமான பயணமாக இருக்கும்.

ஆனால், எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்ட பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள்.

இந்த வார்த்தைதான் நாங்கள் படத்திற்காக  பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது.  நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இப்போது படம் எடுப்பதைவிட எடுத்த படத்தை  வெளியிடுவதுதான் பெரிய போராட்டம். இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி…” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “எங்களது படக் குழுவின் அழைப்பை ஏற்று  வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு முதற்கண் நன்றி.

snekhan

இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை.

இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்..? ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம்.

சென்னையை அண்ணாந்து பர்க்கக்கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது.

விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என  எத்தனையோ இருக்கின்றன.  

இந்தப் படம்தான் எனக்கு சேரன், அமீர் படங்களுக்குப் பிறகு  பாடல்கள் எழுத  மனநிறைவாக இருந்த படம். தொரட்டி’ படத்தின் பாடல்கள் பிடித்திருந்தது என்று பலரும் சொன்னார்கள். இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம்கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம்.  இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது  அரிது.

இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம்.  இந்தப் படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன்.

நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் இந்தத் ‘தொரட்டி’ படத்தைப் போல சிறந்த படைப்பாக மாற்ற வேண்டும்..” என்றார்.

Thorati (11)

கதாநாயகன் ஷமன் மித்ரு பேசும்போது, “விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்த நான், இந்தப் படத்தை சகோதரி இந்து கருணாகரனோடு இணைந்து தயாரித்துள்ளேன்.

இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள்.  “துரோபதியை துகில் உரியும்போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு ‘கிருஷ்ணா, கிருஷ்ணா..’ என்று  கத்துவாளாம்.

ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு ‘கிருஷ்ணா’ என்று கத்துவாளாம். அப்போதுதான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன்தான் இந்தப் படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி.

இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு ‘நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார். ‘பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு, தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடி வரும். அந்தளவிற்கு என்னோடு பழகிவிட்டது.

நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப் படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வை நமக்குத் தரும்.” என்றார்.

Our Score