full screen background image

“இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவிதான் இந்தப் படத்தின் இயக்குநர்” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் பாராட்டு..!

“இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவிதான் இந்தப் படத்தின் இயக்குநர்” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் பாராட்டு..!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம் ரன் பேபி ரன்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை, தி.நகர், ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. இந்த ‘ரன் பேபி ரன்’ படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷூம் கதையை நன்றாகவே தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போவார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் பேசிக் கொள்ளும்போதே கதையிலும், கதாபாத்திரத்திலும் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுப்பார்கள். சராசரி மனிதனின் பார்வையிலேதான் சிந்திப்பார்கள். ஆகையால்தான் இருவருக்கும் தொடர் வெற்றிகள் கிடைத்து கொண்டே இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், மக்கள் செல்வி (ஐஸ்வர்யா ராஜேஷ்)க்கும் எனது நன்றி..” என்றார்.

நடிகர் விஷ்வா பேசும்போது, “இந்தப் படத்தில் இறுதியாக தேர்வானது நான்தான் என்று நினைக்கிறேன். இப்படத்தில் என்னுடையது ஒரு திருப்பு முனையான கதாபாத்திரம். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அட்டக்கத்தி’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு இப்படத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது.

என்னைப் பார்த்ததும் “ஹாய் விஷ்வா…” என்றார். ஆனால், அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தும்கூட அப்போது இருந்ததுபோலவே இன்னமும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிக்கு இதுதான் காரணம். கிருஷ்ணகுமார் சார் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்து காட்டுவார். அவரைப் பின்பற்றினாலே போதும், நாம் நன்றாக நடித்துவிடலாம்…” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு, “ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் நடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். “முதலில் கதையைக் கேட்கிறேன். பின்பு சொல்கிறேன்” என்று நானும் சொன்னேன.

என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும்விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ், எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இப்படத்தில் வசனம் சிறப்பாக இருந்தது. ஆர்.ஜே.பாலாஜியுடன் இதுதான் எனக்கு முதல் படம். படப்பிடிப்பின்போது எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் பேசும்போது, “நான் மலையாளத்தில்தான் நிறைய படங்கள் இயக்கியிருக்கிறேன். வெங்கடேஷ் சார் மூலம்தான் லக்ஷ்மண் சாரின் அறிமுகம் கிடைத்தது.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தது புது அனுபவமாக இருந்தது. கதை கூறும்போது, லக்ஷ்மண் சார்தான் ஆர்.ஜே.பாலாஜியை முன்னிறுத்தினார். இப்படம் முழுக்க சீரியஸாகத்தான் போகும் என்று கதையைக் கூறியதுமே பாலாஜி இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். ஐஸ்வர்யா மேடம் கூறியது சரிதான். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் படம் வெளியானதும் தெரியும்.

நான் முதலில் இங்கு வரும்போது மலையாளத்தில் ஒரு மாதிரி இருக்கும், இங்கு வேறு மாதிரி இருக்கும் பஎன்று பலர் கூறினார்கள். ஆனால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்..” என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “இயக்குநரிடம் கதை கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அந்தளவிற்கு அவர் அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தார். கதை கேட்கும்போதே ஆர்.ஜே.பாலாஜிதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. சுமார் 7 மாத காலத்திற்குப் பிறகுதான் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. கதை கேட்டதும் அவரும் உடனேயே ஒப்புக் கொண்டார்.

அதுவரையிலும் இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. இப்படம் சீரியஸான திரில்லர் படம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “வீட்ல விசேஷம் படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும். இதை செய்தால்தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைத்துதான் அந்த 3 படங்களில் நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்து கொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதனால்நான் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின்தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன். இதுதான் நான் 7 மாதங்களாக லஷ்மண் ஸாரை தொடர்பு கொள்ளாததற்கு காரணம்.

கிருஷ்ணகுமார் சார் என் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார். இந்தப் படத்தில் 33-வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், “அந்த காட்சியில் நடிக்க கயிறு பயன்படுத்தலாமே..?” என்று கேட்டேன். “இல்லை.. அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள்” என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன்.

அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான்தான் அனுப்பினேன்” என சிரித்துக் கொண்டே வேலை வாங்கிவிட்டார்.

அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறு பிறவிதான் இந்த இயக்குநர் கிருஷ்ணகுமார். அவர் திறமையான குழுவை வைத்திருக்கிறார். நான் பொறாமைப்படும் அளவிற்கு அந்தக் குழுவை அமைத்திருக்கிறார். லக்ஷ்மன் சார் பெரிய பொருட் செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நன்றி.

தொழில் நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை.

இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்குத்தான் இருப்பான்.

ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

ஐசரி கணேஷ் சார் எப்படி என் குடும்பத்தில் ஒருவரோ அப்படித்தான் லக்ஷ்மன் சாரும். கார்த்தி சார் போல, தற்போது எனக்காகவும் லக்ஷ்மன் சார் கதை கேட்க ஆரம்பித்து விட்டாராம்.

இந்தப் படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்காக இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும்விதமாக எழுதினால் நன்றாக இருக்கும்…” என்றார்.

Our Score