“நடிகர் விவேக் முன்பு ‘குஷி’ படத்தில் பேசிய ஒரு வசனத்தை தான் எடுத்துப் பேசி புகழ் பெற்றிருக்கிறேன். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் விவேக் ஹீரோவாக நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசினார்.
அந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது. “விவேக் சாருக்கு நான் சின்ன வயதிலிருந்தே பரம ரசிகன். அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடி காட்சிகளை ஒன்றுவிடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். அவருடைய நாத்திக, ஆத்திகக் கொள்கைளைப் பற்றி வீட்டில் விவாதமெல்லாம் வரும். அப்போது ‘அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா.. இல்லையே…?’ என்பேன்.
அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர் அவர். அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கை இல்லை.
கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலத்தான் பார்ப்பார்கள். அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள்.
‘குஷி’ படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்தபோது தியேட்டரில் கை தட்டினார்கள். திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
எப்படியும் என் காமெடிக் காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது. மான் கராத்தே’ படத்தில் வரும் அந்த ‘அடியே ரத்தி அக்னிஹோத்ரி’ என்ற வசனம் இப்போதும் பாராட்டப்படுகிறது. ஆனால் அது ஏற்கெனவே ‘குஷி’ படத்தில் விவேக் ஸார் பேசியதுதான். எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்துதான் ‘மான் கராத்தே’ படத்தில் பேசினேன். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்றார்.
சரி.. பரவாயில்லை. இந்த அளவுக்காச்சும் உண்மையைப் பேசுறாரே.. இதுக்காச்சும் இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்..!