கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் நடிகர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று கன்னடப் படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பவித்ரா லோகேஷ், சம்பத், ரவிசங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை தயாரிப்பாளர்கள் பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவு – விஜய் மில்டன், இசை – சந்தன் ஷெட்டி, கதை – அருண் பாலாஜி, இயக்கம் – நந்த கிஷோர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இந்தச் சந்திப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவா அர்ஜூன் படத்தை தமிழில் வெளியிடுகிற ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ”துருவா என் தங்கச்சி மகன். துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடற்திறன், கராத்தே, பாக்ஸிங், பாம்பேல நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனா அவர் எங்களை விட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம்.
துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதுவும் ஹீரோவா நடிக்கணும்கிற ஆர்வத்தோட வந்தார். ஹீரோவாகுறதுக்கு முன்னே நடிகன் ஆகணும். ஆனா, அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப் பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணேன்.
அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து, தானே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, தானே டைரக்ட் பண்ணி, நடிச்சு ஒரு சி.டி.யில பதிவு பண்ணி கொண்டு வந்தார். பார்த்து அசந்து போனேன்.
ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட். நிறைய படங்கள் நடிக்கணும்கிறதைவிட நல்ல படங்கள்ல மட்டும் நடிக்கணும்கிறதுல அவர் ரொம்பவும் உறுதியா இருக்கார்.
இந்த படத்துக்காக இரண்டரை வருஷம் கடுமையா உழைச்சிருக்கார். படத்துல 16 வயசுப் பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டுவித கேரக்டர்ல நடித்திருக்கிறார். சிறு வயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடையைக் குறைச்சார்.
படத்தோட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சில சர்வதேச ‘பாடி பில்டர்ஸ்’ நாலு பேர் நடிச்சிருக்காங்க. அந்தக் காட்சிகள் அசத்தலா, ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும்…” என்றார்.
நடிகர் துருவா சர்ஜா பேசும்போது, ”அர்ஜுன் மாமாவோட வழிகாட்டலில்தான் நான் என்னோட ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறேன். மாமா எனக்கு பொய் சொல்லக் கூடாதுங்கிற அட்வைஸ்ல ஆரம்பிச்சு, இந்த ஃபீல்டுல நிலைச்சு நிக்கணும்னா எதையெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தார். அர்ஜூன் மாமாவோட ஒப்பிட்டா நான் ஒண்ணுமேயில்லை.
படத்துல என்னோட டான்ஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு தெரியுது. படத்துக்காக நான் டான்ஸ் கத்துக்கலை. அதுக்குப் பதிலா ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டு ஆடியிருக்கேன். எல்லாத்தையும்விட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரொம்பவே ரசிப்பீங்க…” என்றார்.
இந்தப் படத்தில், சர்வதேச உடற் திறன் சாம்பியன்களான கை க்ரீன் (Kai green), மோர்கன் அஸ்தே (Morgan Aste), ஜான் லூகாஸ் (John Lucas), ஜோய்லிண்டர் (Joe linder) என நான்கு பேர் நடித்துள்ளனர்.
அவர்களில் ஜான் லூகாஸ் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ”பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் பேர் போன இந்தியாவுக்கு வந்தது.. இந்தியப் படத்தில் நடிச்சது.. எல்லாமே எனக்குப் பெருமையா இருக்கு…” என்றார்.
இந்த படத்தை ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ டி.முருகானந்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்.
வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.