இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி, திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், ‘நதிகள் நனைவதில்லை’ படத்தைப் பார்த்து இயக்குனர் பி.சி.அன்பழகனை பாராட்டியிருக்கிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான இந்தியா அனுப்பிய ‘மங்கள்யான்’ பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானியான திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், தனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை என்றும் அதற்கு நேரமும் இல்லை என்றும் கூறி வந்த நிலையில், நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை பார்க்க விருப்பப்பட்டார்.
அதன்படி சமீபத்தில் சென்னை இசைக் கல்லூரியில், உள்ள தாகூர் பிலிம் சென்டர் பிரிவியூ தியேட்டரில் அவருக்காக திரையிடப்பட்ட காட்சியில், தனது மனைவியுடன் வந்து திரு.மயில்சாமி அண்ணாதுரை ‘நதிகள் நனைவதில்லை’ படம் பார்த்தார்.
படம் முடிந்த பிறகு, படத்தில் நன்றாக நடித்த ஹீரோ பிரணவ்வையும், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும் வாழ்த்திய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், “படத்தின் கதையும், வசனங்களும், பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.
மேலும் “உச்ச கட்டமாக படத்தில் நடக்கும் கிளைமேக்ஸ் காட்சிகளும், டேம் காட்சிகளும் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கின்றன. கன்னியாகுமரியின் ஒட்டு மொத்த அழகையும் வெண்திரை இல்லாமல் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ள இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், குடும்பத்தோடு பார்க்க கூடிய உயர்ந்த கருத்துக்கள் கொண்ட காட்சிகளை வைத்து, இது ஒரு முக்கியமான படம், என்று சொல்லும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார். படம் முடிந்த பிறகும், படத்தின் அநேக காட்சிகள் மனசை விட்டு அகல மறுக்கின்றன. இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு இந்த படம் திருப்பத்தை தரும்.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றும் பாராட்டினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பாடல்களை வெளியிட்டார். சினிமா நிகழ்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வரும் மயில்சாமி அண்ணாதுரை, கலந்துகொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றொர்கள், தங்கள் கனவுகளை பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்கக் கூடாது.. அவரவர் கால்களில்தான்… அவரவர் பயணங்கள்.. நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான்… குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களை கட்டுவதைவிட…நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும் என்ற உயர்ந்த கருத்துக்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘நதிகள் நனைவதில்லை’.
இதில் பிரணவ், மோனிகா, நிசா, காயத்திரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டு கல்யாணம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செளந்தர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை தவசிராஜ் செய்திருக்கிறார்.
தான் இயக்கும் படங்களின் மூலம் மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல கருத்துக்களையும், மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்களையும் சொல்லும் பி.சி.அன்பழகனின், இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.














