இயக்குநர் மிஷ்கினின் ‘Lone Wolf Production’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் ‘சவரக்கத்தி’.
மிஷ்கினின் உதவி இயக்குனரான G.R. ஆதித்யா இயக்கும் இப்படம் இன்று தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் மிஷ்கின் கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று பரிணாமங்களை ஏற்றுள்ளார்.
இயக்குநர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தான் முன் ஏற்றிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் மிஷ்கின் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
‘சவரக்கத்தி’ படத்திற்கு P.C. ஸ்ரீராம் அவர்களின் உதவியாளர் V.I. கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், ‘பிசாசு’ புகழ் அரோல் குரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார், கோபிநாத் படத்தொகுப்பு செய்ய, N சதீஸ் குமார் கலையமைப்பில், தினேஷ் காசி சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்.
இப்படத்தை பற்றி மிஷ்கின் பேசும்போது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம்..” என்றார் மிக சுருக்கமாக.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம், இயக்குநர்கள் பாலா, கதிர், விக்ரமன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், வெற்றிமாறன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரவி நந்தா பெரியசாமி, அஹமத், பாடலாசிரியர் கபிலன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி, நடிகர்கள் நாசர், ஸ்ரீ, நரேன், செல்வா, தபஸ் நாயக், நடிகை ரேஷ்மி மேனன், தயாரிப்பாளர் Studio 9 R.K. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.