தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2-ம் அலையின்போது திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் மரணமடைந்தனர். தற்போது உருவாகியுள்ள மூன்றாவது அலையின்போதும் திரையுலகத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து நாடு திரும்பிய நடிகர் வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய்க்கும், நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும் நடிகர்கள் மகேஷ் பாபு, நடிகைகள் த்ரிஷா, ஸ்வரா பாஸ்கர், லட்சுமி மஞ்சு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைசியாக நடிகர் சத்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.









