தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெறவிருந்தது.
அப்போது கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு நேற்று கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுப் போடும் உறுப்பினர்களாக சுமார் 1900 பேர் உள்ளனர். இன்று நடத்தப்பட்ட தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.
இன்னொரு தரப்பில், கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவு முடிந்து உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஆர்.கே.செல்வமணி அணியினர் மொத்தப் பேரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 955 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கே.பாக்யராஜ் 566 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர் வி உதயகுமார் 966 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் 538 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட பேரரசு 938 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வெங்கட் பிரபு 580 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அணியில் போட்டியிட்ட ஏகாம்பவாணன், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, சி.சுந்தர் நால்வரும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் ஆர்.கே.செல்வமணியின் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமேஷ் கண்ணா(960), மனோஜ்குமார்(959), மனோபாலா(909), சரண்(893), திருமலை(723), ஏ.வெங்கடேஷ்(949), ரவி மரியா(983), ஆர்.கே.கண்ணன்(1013), முத்து வடுகு(835), நம்பி(1052), ரமேஷ் பிரபாகர்(779), கிளாரா(876) ஆகிய 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.