இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்திவரும் தொழிலதிபரான ஜான் சுதிர், இதுநாள்வரையிலும் நட்பு ரீதியாக தமிழ்ச் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்திருக்கிறார்.
2013-ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக தெலுங்கு ஹீரோ சுமந்த் நடிப்பில் ‘ஏமோ குர்ரம் எகரா வச்சு’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார்.
அதற்கு பிறகு ‘ராமா ரீல்ஸ்’ என்ற பட நிறுவனத்தை துவங்கி ‘விக்கி டோனர்’ என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.
ஜான் சுதிருக்கு இயல்பாகவே படைப்புலகில் சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் மீது, அதிக ஆர்வம் உண்டு என்பதால் தமிழ் படங்களை தயாரிக்க முடிவு செய்தார்.
அதன்படி ரவி பார்கவன் இயக்கத்தில் பரத் நடிப்பில் ‘கடைசி பென்ச் கார்த்தி’ என்ற பெயரில் தமிழிலும் ‘மல்லி பிரேமிஸ்தே’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பரத் நேரடியாக கால் பதிக்கும் படம் இது.
இதே நேரம் உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணியின் இசையில் ‘ஷோ டைம்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘காட்சி நேரம்’ என்ற பெயரில் தமிழிலும் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார்.
அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதை தவிர தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘காஞ்சனா-2’ படத்தை கொரியா, சைனா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.
இப்படி உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜான் சுதிர்.
இந்திய கலைஞர்களை கொண்டு வெளிநாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன்படுத்தி படங்களை தயாரிக்க உள்ளார்.
பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ஜாக்கிசான், டோனி ஜா ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஜான் சுதிர் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.