நடிகர் பிரபாஸ் – பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு முன் செய்திகள் வெளியானது. இதற்கு நடிகை கிருத்தி சனோன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என சில இணையத்தளங்களில் இன்றைக்கு செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் விளக்கமளித்து பேசுகையில், ”இந்தச் செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்தக் கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்…” என்றனர்.
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை கிருத்தி சனோன், இவர்களுடன் சையீப் அலி கான், சன்னி சிங் மற்றும் வத்ஸல் ஷெத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.









