நேற்று 4-ம் தேதி காலை 9.05 மணிக்கு சினிமா பிரபலங்கள் பலரது பங்கேற்பில் ‘பிதா’ படத்தின் பூஜை, வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.
வரும் ஏப்ரல் 7-ம் தேதியன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அன்று படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு… டப்பிங், எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங், பின்னணி இசை போன்ற அனைத்து வேலைகளையும் அதே 7-ம் தேதி இரவுக்குள் முடித்து விட்டு மறுநாள் ஏப்ரல் 8-ம் தேதி படத்தை தியேட்டர்களில் திரையிட்டு சாதனை படைக்க இந்தப் படக் குழு திட்டமிட்டுள்ளது.
அனு முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆதேஷ் பாலா (நகைச்சுவை நடிகர் – அமரர் சிவராமனின் கலைவாரிசு), தவிர அருள்மணி, நகைச்சுவை நடிகர் சாம்ஸ் உள்பட பலரும் நடிக்கின்றனர்.
வசனம் – பாபா கென்னடி, ஒளிப்பதிவு – இளையராஜா, இசை – நரேஷ், படத் தொகுப்பு – ஸ்ரீவத்சன், லைவ் சவுண்டு ஒலிப்பதிவு – வினோத் ஜாக்சன், கலை இயக்கம் – கே.பி.நந்து, தயாரிப்பு நிர்வாகம் – பி.வி.பாஸ்கரன், புகைப்படங்கள் – ரிஷால், ஈஸ்வர், லக்ஷ்மன், படத் தொகுப்பு – தீபக், டிசைனர் – விவேக் சுந்தர், நிர்வாக தயாரிப்பாளர் – சதீஷ்குமார்.
தயாரிப்பாளர் விச்சூர் எஸ் சங்கர் ஆகிய இளைஞர் பட்டாளத்தை துணைக்கு நிறுத்திக் கொண்டு இந்த சாதனை முயற்சியில் இறங்குகிறார் இயக்குநர் சுகன்.
ஆரம்பத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் சுகன். பின்னர் டான்சில் இருந்து டைரக்ஷன் பக்கம் நுழைந்து இருக்கிறார்.
இயக்குநர் ரமேஷ் செல்வனிடம் உதவி, துணை, இணை இயக்குநர் அந்தஸ்தில் படிப்படியாக அனுபவப் பாடம் படித்து, இன்று தனியாக ‘பிதா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் சுகன்..!
‘பிதா’ எழுத்துக்களின் நடுவில் துப்பாக்கித் தோட்டாக்கள் ஊடுருவுவதைப் பார்த்தால் ஆக்ஷன் – சஸ்பென்ஸ்- திரில்லர் என்று யாரும் ஊகிக்கலாம். அது நூற்றுக்கு நூறு சரிதான்.
ஒரே லொக்கேஷனில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அடுத்தடுத்து ஐந்து லொக்கேஷன்கள். அதுவும் நகருக்கு பக்கத்து பக்கத்திலேயே. மொத்தம் ஒன்பது கேமராக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
“பிதா” என்ற தலைப்புக்கு கீழே 23:23 என்ற எண்கள் வருகிறது. அதன் விளக்கம் ரகசியம் என்ன என்று கேள்வியை முழுக்க முடிப்பதற்குள்ளாக முந்தி கொண்டார் இயக்குநர் சுகன்.
அவர் இந்தப் படம் குறித்துப் பேசும்போது “ரிலீஸ் நாளில்தான் அதற்கு விடை கிடைக்கும் முதல் நாள் காலை துவங்கும் படப்பிடிப்பு நள்ளிரவுவரை தொடரும். படத்தில் 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட்தான்.
இயக்குநராக வருகிறோம். ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும். ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும்…” என்ற ஒரே ஒரு சின்ன ஆசைதான் இந்தப் புதுமை முயற்சி’’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் இயக்குநர் சுகன்.
“வித்தியாச சிந்தனைகள் வேர் விடும் இளம் நடிகர் ஆதேஷ் பாலா, புதுமை முயற்சியா… ஓகே என்று உதவிக் கரம் நீட்டி இருக்கும் விச்சூர் எஸ்.சங்கர் மற்றும் இளைஞர் பட்டாளம் என்கூட நடக்கிறபோது நிஜத்தில் கனவு – நிழலில் பலிக்கும்..” என்ற உடும்பு பிடியோடு நடக்கிறார் சுகன்.