‘மஸ்காரா போட்டு மயக்குறியே’, ‘மக்காயலா மக்காயலா’, ‘வேலா வேலா வேலாயுதம்’, ‘உசுமுலாரசே உசுமுலாரசே’, ‘செக்ஸி லேடி கிட்ட வாடி’, ‘மனசுக்குள் புது மழை விழுகிறதே’ போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
தமிழ்த் திரைக்கூடம் என்ற திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் அரணம் என்ற படத்தில்தான் பிரியன் நாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ‘ராட்டினம்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’, ‘சத்ரு’ போன்ற படங்களில் நடித்திருக்கும் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நித்தின்.K.ராஜ், E.J.நௌசத், இசை – சாஜன் மாதவ், படத் தொகுப்பு – PK, பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா, கலை இயக்கம் – பழனிவேல், ஸ்டண்ட் – Rugger ராம்குமார், நடனம் – ராம்சிவா, ஸ்ரீசெல்வி, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – தமிழ்த் திரைக்கூடம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.

படம் பற்றி இயக்குநர் பிரியன் பேசும்போது, “வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாராத ஆச்சர்ய, அதிர்ச்சியான சம்பவங்கள்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை அவன் எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் கதை.
ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புது மனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான்.
மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத் துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாராத மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்து தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் பாதி முழுக்க ஒரு திசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரையிலும் கண்டிராத திரைக்கதை அனுபவத்தை இந்த அரணம் வழங்கும்.
ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். என் பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும், எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நன்றி..!” என்றார்.









