இப்போது சினிமாவுக்குள் படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகியுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால்.
இவர் பொறியியல் பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் படித்தவர். வழக்கறிஞர் பட்டமும் பெற்றவர். தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். சொந்தமாக கல்வி நிலையங்களும் நடத்தி வருபவர்.
‘பட்ற’ படத்தில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, “எங்கள் கல்லூரிக்கு டைரக்டர் ஜெயந்தன் படப்பிடிப்புக்கு லொகேஷன் பார்க்கத்தான் வந்தார். வந்தவர் தன் படத்தில் சிறிய வேடம் இருக்கிறது என்று சாதாரணமாகத்தான் என்னிடம் சொன்னார். ஏதோ சிறு வாய்ப்பு என்று நினைத்தேன். படத்தில் நடிக்கும்வரை என் பாத்திரம் பற்றி முழுமையாகத் தெரியாது. முதல் நாள் நடித்தேன் பதற்றமாகவே இருந்தது. போகப் போக தைரியம் வந்தது. நானாக எதுவும் செய்யவில்லை. டைரக்டர் ஜெயந்தன் சொன்னபடி நடித்தேன். ஆனால் மறுநாள் யோசிக்கும்போது முதல் நாள் இன்னமும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்கிற அளவுக்கு ஆர்வமும் புரிதலும் வந்துவிட்டது.
நான் ஒரு சினிமா ரசிகன். நிறைய படங்கள் பார்ப்பேன். அதிலும் ஆங்கிலப் படங்கள்தான் அதிகம் பார்ப்பேன். கேங்ஸ்டர் படங்கள், உண்மைக் கதை அடிப்படையிலான படங்களை விரும்பிப் பார்ப்பேன். சிலவற்றை பார்க்கும்போது இதைத் தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும் இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பது உண்டு.
வெளியிலிருந்து சினிமா பற்றி வெகு சாதாரணமாக அலட்சியமாக கருத்து சொல்லி விடுகிறோம். இங்கு எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உள்ளே வந்து பார்த்தால்தான் புரிகிறது. நடித்த பிறகு சினிமா பற்றிய என் பார்வையே மாறி விட்டது.
இப்போது வில்லனை யாரும் திட்டுவதில்லை. ரசிக்கவே செய்கிறார்கள். படம் வெளியான திரையரங்கம் போனபோது ‘அவனா நீ’ என்று என்னைப் பார்த்து சிரித்தார்களே தவிர யாரும் முறைக்கவில்லை. வீட்டில் என் தங்கை மட்டுமல்ல. என் கல்லூரியிலும் மாணவர்கள், மாணவிகளும் ஆரவாரம் செய்து ரசித்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது சினிமா நடிகனை நடிகனாகவே பார்க்கிறார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு பல பேர் பலவிதமாகப் பாராட்டினார்கள். அதில் ‘எல்லாரும் என் தம்பிங்கள்தான்டா’ என்று நான் பேசும் வசனத்தை வைத்து ஜாலியாக ஓட்டுகிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பு. அந்த வசனம் சமூக வலைதளங்களில் பெரிய ஹிட்டடித்துள்ளது. பாக்யராஜ் சார் படம் பார்த்துவிட்டு பாராட்டியது மட்டுமல்ல நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று வாழ்த்தினார். இதை மறக்க முடியாது..” என்றார் நெகிழ்ச்சியுடன்..!
இப்போது சாம்பால், இவரது பக்கத்து வீட்டுக்காரரான இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் ‘ஷட்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.










