அன்னை பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனியின் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்.
இயக்குநர் சுசீந்திரனின் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாவில் கலந்து கொள்வது போன்றது. அதனால்தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். இது என்னுடைய பட விழா போல் உள்ளது. இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள்.
விக்ராந்த் என்னுடைய தம்பி. சந்தீப்பும் என்னுடைய தம்பிதான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரை இங்கே நான் ‘தம்பி’ என்று அழைப்பேன். தெலுங்கில் ‘தம்முடு’ என்று அழைப்பேன். அவர் ‘மாநகரம்’ திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும்.
இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் மெஹ்ரீனுடன் நான் ‘தம்ப்ஸ்-அப்’ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார். அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும்.
தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் பிளாட்பார்மில் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும். சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம்.
‘துப்பறிவாளன்’ மற்றும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படங்கள் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்…” என்றார் விஷால்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “நான் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும்.
இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ‘பாண்டிய நாடு’ போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.
நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ‘ஜீவா’ திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ‘ஜீவா’ திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன். ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின்புதான் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஹீரோக்களை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது.
சில கால இடைவெளிக்குப் பிறகு சந்தீப்புடன் இப்போது இந்தப் படத்திற்காக இணைந்துள்ளேன். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்ய வேண்டும். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் நிச்சயமாக வருவார்…” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.











