1990-களின் காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரையன்’.
இந்தப் படத்தில் நாயகனாக இனிகோ பிரபாகரும், நாயகியாக புதுமுகம் ஷைனியும் நடித்துள்ளனர்.
மேலும் ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – S.N.அருணகிரி, ஒளிப்பதிவு – P.V.முருகேஷா, படத் தொகுப்பு – ராஜா முகமது, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சரவண ராஜா, சண்டை காட்சி – ராக் பிரபு, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்.
சோழ மன்னன் வாழ்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும்,மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.
இந்தப் படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் பயணமாகும். ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து, பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.
பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும் சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது.
5 பாடல்கள் மற்றும் 4 சண்டை காட்சிகளுடனான இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ‘சரசம்மா’ என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும்.
இத்திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.