1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் இயக்குநர் துரையின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘நீயா’.
தற்போது ‘நீயா-2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.
‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெய் நாயகனாகவும், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா மூவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், நிதிஷ் வீரா, லோகேஷ், மானுஷ், சி.எம்.பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – எல்.சுரேஷ், ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், இசை – ஷபீர், பாடல்கள் – கபிலன், மோகன்ராஜன், பவன் மித்ரா, கு.கார்த்திக், எஸ்.என்.அனுராதா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.அய்யப்பன், சண்டை இயக்குநர் – ஸ்டண்ட் ஜி.என்.முருகன், நடன இயக்கம் – கலா, கல்யாண், விஜி, சதீஷ், ஸ்ரீகிரீஷ், உடைகள் – பி.ஆர்.கணேஷ், ஒலிக் கலவை – டி.உதயகுமார், சிறப்பு சப்தம் – கே.ராஜசேகர், டிசைன்ஸ் – ரெட் டாட் பவன், ஸ்டில்ஸ் – விஜய், ஒப்பனை – எம்.என்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் – அஷ்கர் அலி, தயாரிப்பு மேற்பார்வை – பி.சுரேஷ், தயாரிப்பு – ஜம்போ சினிமாஸ், தயாரிப்பாளர் – ஏ. ஸ்ரீதர்.
‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை இந்தப் படத்தில் மறுஉருவாக்கமும் செய்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
இத்திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதையடுத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை லட்சுமி ராய், நடிகர் ஜெய் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
நடன இயக்குநர் விஜி பேசும்போது, “நான் பணியாற்றிய பாடல் காட்சியை படமாக்கியது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. லட்சுமி ராய் உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார். ஆனால் ஒரே பிரேமில் இருவரையும் வெவ்வேறு உடல் மொழியில் காட்ட வேண்டும். ஜெய் பார்க்கும்போது கேத்தரீனாக தெரிய வேண்டும், பார்க்காதபோது ராய் லட்சுமியாக தெரிய வேண்டும். ஒரே காட்சியில் இருவருக்கும் இரு வேறு நடன அமைப்பை கொடுக்க வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பாடலை படமாக்கியிருக்கிறோம்..” என்றார்.
நடிகர் பால சரவணன் பேசும்போது, “நான் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்திய என் நண்பர் ராஜ பாண்டிக்குத்தான் நன்றி சொல்லணும். இயக்குநர் சுரேஷ் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். முதலில் என்னிடம் ஒரு சாமான்ய மனிதனைப் பற்றிய கதையைத்தான் கூறினார். ஆனால் திடீரென்று இந்த ‘நீயா 2’ படத்தின் கதையைக் கூறி, இப்படத்தை முதலில் முடித்துவிட்டு பிறகு அந்த படத்தை எடுப்போம் என்றார். படம் நன்றாக வந்திருக்கிறது..” என்றார்.
நாயகி ராய் லட்சுமி பேசும்போது, “2 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் தமிழில் நடிக்கிறேன். இயக்குநர் சுரேஷ் வந்து என்னிடம் கதையைக் கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன்.
இது பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதையும் ஒரு பகுதியாக இருந்ததால் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.. என்னுடைய கேரியரில் இத்திரைப்படமும் ஒரு முக்கிய படமாக இருக்கும்..” என்றார்.
இசையமைப்பாளர் ஷபீர் பேசும்போது, “நான் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததால், இங்கு பேசும் தமிழைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இசையமைக்க வேண்டும். அதேபோல் இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. மகுடி மட்டுமல்ல பாம்பிற்கு ஏற்ற வகையில் இசையை எப்படி அமைக்க வேண்டும் என்பதையும் இந்தப் படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்…” என்றார்.
இயக்குநர் எல். சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நானும் வெற்றி மாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்புதான் ‘எத்தன்’. ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
பாம்பை வைத்து படம் பண்ணனும் என்று தயாரிப்பாளர் கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. பிறகுதான் இந்தப் படத்தின் கதை எனக்குள் தோன்றியது.
‘நீயா’ படத்தில் நிஜ பாம்பைத்தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்து கொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.
ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம்தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பைத்தான் காட்டியிருக்கிறோம்.
‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும்.
இப்படத்தில் நிஜ வில்லன் மழைதான். படப்பிடிப்பு நடந்த அத்தனை இடங்களிலும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் குந்த சிரமத்திற்கிடையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். வரலட்சுமிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் பெரியதாக அமைய காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மிதான். அவர்களைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி…” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான எல்.சுரேஷூம் நானும் எங்களது குருநாதரான பாலு மகேந்திராவிடம் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். சுரேஷ் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.