full screen background image

விக்கல்ஸ் விக்ரம், ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ‘லைட் வெயிட் பேபி’!

விக்கல்ஸ் விக்ரம், ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ‘லைட் வெயிட் பேபி’!

ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் கே.சி.குரு இயக்கத்தில் உருவாகும் இந்த ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் ‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.

பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்தப் படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு சாகர் சந்தேஷ் – ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் லீ கிளப் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே.சி.குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், ”இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள்.

நான் முதன்முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ- ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.

2016-ம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். நான் ஒரு அமைதியான கலைஞன். என்னைப்போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆகத்தான் பார்த்தார்கள். அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.

இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.

எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.

என்னுடைய அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்துதான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.

ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவுவரை பெட்ரூமில் இருப்பதையும்… அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌

‘நிலவை கொண்டு வா’ என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது.

அந்த தருணத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா – சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள்.

திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

“நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி” என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் “அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் மிகப் பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ… தெரியாது. ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம். எங்களைப் பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை ‘பங்க்’ செய்தவன்.. போன்ற விசயங்கள்தான் நினைவில் இருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதுதான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்துத் தெரிந்து கொண்டார்.‌

இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரைத்தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.

நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.

எனக்கு இந்த இயக்குநரை சமீபத்தில்தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் “நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம்?” என கேட்டபோது “பேசுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிலீஸ் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.

இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர் ரோல்களில் நடிப்பதற்குத்தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் “நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும்” என்று ஒரு மெஸேஜ் வந்தது. நான்கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் – பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகுதான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள்.

திகைத்து போனேன். அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே.சி.குருவுக்கு நன்றி.

2016-ம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்ட ஒரு கனவு இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் படத்திற்கான டைட்டில் ‘லைட் வெயிட் பேபி.’

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது. ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது. அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால்தான் நான் இந்தப் படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.

இந்த படத்தின் டைட்டிலைவிட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின்தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை முதலில் உருவாக்கிவிட்டு பின்பு உங்களிடம் வருகிறோம்” என்றார்.

இயக்குநர் கே.சி.குரு பேசுகையில், ”நான் பெங்களூரூவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.

‘லைட் வெயிட் பேபி’ என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்… மறுபக்கம் எடை அதிகமாகவும்…. இருக்கும். இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌” என்றார்.

நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், ”எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய  முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்” என்றார்.

Our Score