full screen background image

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ‘பருத்தி வீரன்’ சரவணன், சாக்சி அகர்வால், டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாக்ஷி அகர்வால் இந்தப் படத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகிறார். ஏனென்றால் அவர் இரண்டு சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை முழுவதுமாக படப்பிடிப்பு முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் வைத்திருந்து சமீபத்தில்தான் அதைப் படமாக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக் காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அதாவது ஜிம்மில் நடந்தது. இந்த சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார். அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார்.

இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக் கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும்.

Our Score